இலங்கை
நாளை கூடவுள்ள நாடாளுமன்றம் அமர்வு!

நாளை கூடவுள்ள நாடாளுமன்றம் அமர்வு!
இலங்கையின் நாடாளுமன்றம் நாளை கூடவுள்ள நிலையில், தற்போது வெற்றிடமாக உள்ள சபாநாயகர் பதவிக்கு புதிய சபாநாயகர் நாளை தெரிவு செய்யப்பட்டு தொடர்ந்து வழமை போன்று நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
நாளை காலை 9.30 முதல் 10.30 வரையான நேரமானது வாய்வழி பதில்களை எதிர்பார்க்கும் கேள்விகளுக்கு முன்னதாகவே ஒதுக்கப்பட்டிருந்தது எனினும் புதிய சபாநாயகர் தெரிவு, அமர்வின் ஆரம்பத்தின் போதே இடம்பெறவுள்ளதால் அதற்கு சிறிது நேரம் எடுக்கும் எனவும் இதன்போது தெரிவிக்கப்படுகிறது.
சபாநாயகராக செயற்பட்ட, அசோக ரன்வலவின் இராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டதையடுத்து, 10ஆவது நாடாளுமன்றத்தின் சபாநாயகர் பதவி தற்போது வெற்றிடமாகவுள்ளது.
சபாநாயகர் பதவிக்கு ஆளுங்கட்சி சார்பில் ஏற்கனவே 3 பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ள நிலையில் புதிய சபாநாயகர் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பதற்காக ஆளும் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.
இதேவேளை, எதிர்க்கட்சியில் இருந்து சபாநாயகர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பெயரை முன்மொழியவுள்ளதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து சபாநாயகர் பதவிக்கு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பெயரை முன்மொழிவது பொருத்தமானதல்ல என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார். (ச)