
நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer
Published on 16/12/2024 | Edited on 16/12/2024

புஷ்பா 2 – தி ரூல்’ படம் கடந்த 5ஆம் தேதி வெளியாகியிருந்தது. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தின் சிறப்பு காட்சி ஹைதராபாத்திலுள்ள சந்தியா திரையரங்கில் திரையிடப்பட்டது. அப்போது, அங்கு எந்த முன் அறிவிப்புமின்றி அல்லு அர்ஜூன் சென்றார். திடீரென அவரை பார்த்ததால் ரசிகர்கள் அனைவரும் அவரை நோக்கி ஓடினார். அந்த கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி (வயது 39) என்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மகன் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையடுத்து அல்லு அர்ஜுன், அவரது பாதுகாப்புக் குழு மற்றும் சம்பந்தப்பட்ட திரையரங்கம் மீது ஹைதராபாத் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். அல்லு அர்ஜூன் மீது எந்த முன்னறிவிப்பும் இன்றி வந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதனையடுத்து அல்லு அர்ஜூன் அப்பெண்ணின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு தருவதாக உத்தரவாதம் கொடுத்தார். மேலும் சிகிச்சைப் பெற்று வரும் சிறுவனின் மருத்துவச் செலவை ஏற்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக அல்லு அர்ஜூன் காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட் பின்பு ஜாமீனில் வெளி வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இழப்பை யாராலும் ஈடுகட்ட முடியாது. அந்த பெண்ணின் குடும்பத்தினருக்காக நான் இருக்கிறேன். என்னால் முடிந்த உதவியை செய்வேன்” என்றார். இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்த பெண்ணின் மகன் குறித்து உருக்கமாக ஒரு பதிவை அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில், “துரதிர்ஷ்டவசமான அந்த சம்பவத்திற்குப் பிறகு தொடர்ந்து மருத்துவ சிகிச்சையில் இருக்கும் சிறுவன் ஸ்ரீ தேஜ் குறித்து நான் மிகுந்த கவலையில் இருக்கிறேன். இப்போது நடைபெற்று வரும் சட்ட நடவடிக்கைகள் காரணமாக, அவரையும் அவரது குடும்பத்தினரையும் இந்த நேரத்தில் சந்திக்க வேண்டாம் என எனக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் எனது பிரார்த்தனைகள் அவர்களுடன் இருக்கும், மேலும் மருத்துவ மற்றும் குடும்பத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான பொறுப்பை நான் ஏற்பதாக உறுதியளிக்கிறேன். அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன், அவரையும் அவரது குடும்பத்தினரையும் விரைவில் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.