நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer

Published on 16/12/2024 | Edited on 16/12/2024

ஆடுகளம் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமான டாப்ஸி, தொடர்ந்து வந்தான் வென்றான், காஞ்சனா 2, கேம் ஓவர், அனபெல் சேதுபதி உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இதனிடையே கதை திரைக்கதை வசனம் இயக்கம், வை ராஜா வை உள்ளிட்ட படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். மேலும் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். தமிழில் ஜெயம் ரவியின் ‘ஜன கன மன’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் வெளியாவதில் தாமதமாகி வருகிறது.   

இதனிடையே டென்மார்க்கை சேர்ந்த பாட்மிட்டன் பயிற்சியாளர் மத்யாஸ் போ என்பவரை பல வருடங்களாக டாப்ஸி காதலித்து வந்ததாக கூறப்பட்டது. இந்தாண்டு மார்ச்சில் அவரை ராஜஸ்தான் உதய்பூரில் திருமணம் செய்து கொண்டார். அத்திருமணம் சீக்கிய மற்றும் கிறிஸ்துவ முறைப்படி நடைபெற்றதாகவும் அதில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மற்றும் சில திரை பிரபலங்கள் மட்டுமே கலந்துகொண்டதாகவும் தகவல் வெளியாகின. ஆனால் அதை அதிகாரப்பூர்வமாக டாப்ஸி அறிவிக்கவில்லை. இருப்பினும் திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. 

Advertisement

இந்த நிலையில் தனது திருமணம் குறித்து மனம் திறந்துள்ளார் டாப்ஸி. சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர், “நாங்கள் முறையான அறிவிப்பை வெளியிடாததால், எனது திருமணம் குறித்து மக்களுக்குத் தெரியாது. உண்மையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் எங்களுக்கு திருமணம் நடந்தது. எங்கள் திருமண நாள் விரைவில் வருகிறது. இன்று நான் சொல்லாமல் இருந்திருந்தால் யாருக்கும் தெரிந்திருக்காது. எங்கள் தனிப்பட்ட வாழ்க்கையையும் தொழில் ரீதியான வாழ்கையையும் தனித்தனியாகவே பார்க்க விரும்புகிறோம். இரண்டிற்கும் இடையே ஒரு சமநிலையை பராமரிக்க நான் எப்போதும் முயற்சிக்கிறேன்” என்றார். இந்த தகவல் அதிர்ச்சியளிப்பதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.