உலகம்
இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களால் காசாவில் உயிரிழப்பு 45,000ஐ தாண்டியது!

இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களால் காசாவில் உயிரிழப்பு 45,000ஐ தாண்டியது!
காசாவில் இஸ்ரேல் கடந்த 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதல்களில் 52 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்ட நிலையில் கடந்த 14 மாதங்களில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களில் பலியான பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 45,000ஐ தாண்டியுள்ளது. காசா சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் காசாவெங்கும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் கடந்த 24 மணி நேரத்தில் 52 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு மேலும் 203 பேர் காயமடைந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 45,028 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 106,962 பேர் காயமடைந்துள்ளனர்.
குறிப்பாக வடக்கு காசாவில் பெயித் லஹியா திட்டத்தில் உள்ள வீடு ஒன்றின் மீது இஸ்ரேல் நேற்று நடத்திய வான் தாக்குதல்களில் ஐவர் கொல்லப்பட்டு பலரும் காயமடைந்திருப்பதாக உள்ளூர் ஊடகங்களை மேற்கோள்காட்டி பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டுள்ளது. மத்திய காசாவில் உள்ள நுஸைரத் அகதி முகாமில் இஸ்ரேல் நேற்று நடத்திய மற்றொரு தாக்குதலில் மேலும் மூன்று பேர் பலியாகியுள்ளனர். இதேவேளை தெற்கு காசாவின் கான் யூனிஸ் நகரில் இடம்பெயர்ந்த மக்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிறுவனத்தினால் நடத்தப்படும் பாடசாலை ஒன்றை இலக்கு வைத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் நடத்திய சரமாரி செல் தாக்குதலில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இதில் நாசர் மருத்துவ வளாகத்திற்கு அருகில் இருக்கும் இந்த பாடசாலையில் விழுந்த குண்டுகளால் கொல்லப்பட்டவர்களில் தபேஷ் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தை ஒன்று இருப்பதாக வபா செய்தி நிறுவனம் குறிப்பிட்டது. வடக்கு காசாவில் ஜபலியா அகதி முகாமின் அபூ கமர் பகுதியில் உள்ள பல குடியிருப்புக் கட்டடங்களையும் இஸ்ரேலியப் படை குண்டு வைத்து தகர்த்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
வடக்கு காசாவில் இஸ்ரேல் தனது முற்றுகையை கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக முன்னேடுத்து வருவதோடு அங்கு கடும் தாக்குதல்களையும் நடத்தி வருகிறது. இங்கு இனச்சுத்திகரிப்பில் ஈடுபடும் இஸ்ரேல் மனிதர்கள் யுத்த சூன்ய வலயம் ஒன்றை உருவாக்க முயற்சிப்பதாக பலஸ்தீனர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். எகிப்து, கட்டார் மற்றும் அமெரிக்காவின் மத்தியஸ்தத்தினால் போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிக்கும் முயற்சிகள் கடந்த பல மாதங்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றபோதும் அண்மைய வாரங்களில் அது தொடர்பில் நம்பிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. எனினும் இன்னும் உறுதியான முன்னேற்றங்கள் எட்டப்படவில்லை.
இந்நிலையில் எதிர்வரும் 20 ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏற்கவுள்ள டொனால் டிரம்புடன், பணயக்கைதிகளை பாதுகாப்பாக விடுவிக்கும் முயற்சிகள் தொடர்பில் பேசியதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.
‘இஸ்ரேலின் முழுமையான வெற்றியின் தேவை தொடர்பில் நாம் பேசியதோடு எமது பணயக்கைதிகளை விடுவிக்கும் முயற்சிகள் பற்றியும் நீண்ட பேச்சுவார்த்தையில் நாம் ஈடுபட்டோம்’என்று நெதன்யாகு கடந்த ஞாயிறன்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2023 ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது பலஸ்தீன போராளிகள் நடத்திய தாக்குதலின்போது 250க்கும் அதிகமானவர்கள் பணயக்கைதிகளாக கடத்திச் செல்லப்பட்டனர். இவர்களில் 100க்கும் அதிகமானவர்கள் தொடர்ந்தும் காசாவில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது.