இந்தியா
கார்- லொறி மோதி விபத்து- 6 பேர் உயிரிழப்பு – 7 பேர் காயம்!

கார்- லொறி மோதி விபத்து- 6 பேர் உயிரிழப்பு – 7 பேர் காயம்!
சத்தீஷ்கரின் பலோட் மாவட்டத்தின் தவுண்டி பொலிஸ் நிலைய பகுதியின் அருகே நேற்று முன்தினம் இரவு, 13 பேருடன் சென்ற சொகுசு காரும், லொரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காரில் பயணித்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதோடு, 7 பேர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் பற்றி பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் காயமடைந்தவர்கள் மீட்ட பொலிஸார் அவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், ஐந்து பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உள்பட காயமடைந்த ஏழு பேர் உள்ளூர் சமூக சுகாதார மையத்திற்கு மாற்றப்பட்டனர், அங்கிருந்து அவர்கள் மேல்சிகிச்சைக்காக ராஜ்நந்த்கான் மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். இறந்தவர்கள் துர்பத் பிரஜாபதி (30), சுமித்ரா பாய் கும்ப்கர் (50), மனிஷா கும்ப்கர் (35), சகுன் பாய் கும்ப்கர் (50), இம்லா பாய் (55) மற்றும் சிறுவன் ஜிக்னேஷ் கும்ப்கர் (7) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.