உலகம்
கோலன் குன்றில் குடியேற்றங்களை விரிவுபடுத்த இஸ்ரேல் புதிய திட்டம்!

கோலன் குன்றில் குடியேற்றங்களை விரிவுபடுத்த இஸ்ரேல் புதிய திட்டம்!
ஆக்கிரமிக்கப்பட்ட கோலன் குன்றில் குடியேற்றங்களை விரிவுபடுத்தும் திட்டம் ஒன்றுக்கு இஸ்ரேலிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இஸ்லாமியவாதிகள் தலைமையிலான கிளர்ச்சியாளர் கூட்டணி ஒன்றிடம் அஸாத் அரசு வீழ்ந்த பின் சிரியாவுடனான இஸ்ரேலின் எல்லையில் ‘புதிய முன்னரங்கு’ ஒன்று ஏற்பட்டிருப்பதன் காரணமாக இந்த நடவடிக்கை அவசியமாக இருப்பதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.
1967 ஆறு நாள் போரின்போது இஸ்ரேல் ஆக்கிரமித்த கோலன் குன்றின் மக்கள் தொகையை இரட்;டிப்பாக்க நெதன்யாகு விரும்புகிறார். எனினும் இந்தப் பகுதி சட்டவிரோதமான முறையில் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாக சர்வதேச சட்டம் குறிப்பிடுகிறது.
அஸாத் அரசு கவிழ்க்கப்பட்டதை அடுத்து கோலன் குன்றை பிரிக்கும் யுத்த சூன்ய வலயத்திற்குள் இஸ்ரேலியப் படைகள் முன்னேறி வருகிறது. சிரியாவில் ஏற்பட்டிருக்கும் ஆட்சி மாற்றம் காரணமாக போர் நிறுத்த ஏற்பாடுகள் முறிந்துவிட்டதாக இஸ்ரேல் நியாயம் கூறி வருகிறது.
எனினும் சிரியாவுடன் மோதலில் ஈடுபட விரும்பவில்லை என்று நெதன்யாகு கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டிருந்தது.
‘கள நிலவரத்தின் யதார்த்தத்திற்கு அமைய சிரிய ஒப்பந்தம் தொடர்பில் இஸ்ரேலின் கொள்கையை நாம் தீர்மானிப்போம்’ என்று அவர் குறிப்பிட்டார். கோலன் குன்றில் 30க்கும் அதிகமான இஸ்ரேலிய குடியேற்றங்கள் உள்ளன. இவைகளில் 20,000 பேர் வரை இருப்பதாக மதிப்படப்பட்டுள்ளது. சர்வதேச சட்டத்தின்படி இவர்கள் சட்டவிரோத குடியேறிகளாக கருதப்படுகின்றனர்.
இந்த குடியேற்றங்களில் இருப்பவர்கள் சுமார் 20,000 சிரியர்களுடன் வசித்து வருகின்றனர். இதில் இந்தப் பகுதி இஸ்ரேலின் கட்டுப்பாட்டுக்குள் வந்தபோது தப்பிச் செல்லாத துரூஸ் அரபு சிரியர்களே இங்கு பெரும்பான்மையாக வசிக்கின்றனர்.
‘இஸ்ரேல் (இந்த நிலப்பகுதியை) தொடர்ந்து தக்கவைத்து அங்கு குடியேற்றங்களை அதிகரிக்கும்’ என்று நெதன்யாகு வலியுறுத்தியுள்ளார்.
சிரியாவில் இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்களை அந்நாட்டில் ஆட்சியை பிடித்திருக்கும் கிளர்ச்சியாளர்களின் தலைவரான அஹமது அல் ஷாரா சாடிய நிலையிலேயே நெதன்யாகுவின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. சிரியாவின் இராணுவ தளங்களை அழிக்கும் வகையிலேயே இஸ்ரேல் அங்கு தாக்குதல்களை நடத்தி வருகிறது.
சிரியாவில் கடந்த டிசம்பர் 8 ஆம் திகதி தொடக்கம் இஸ்ரேல் 450 க்கும் அதிகமான முறை வான் தாக்குதல்களை நடத்தி இருப்பதோடு இதில் கடந்த சனிக்கிழமை இரவு தொடக்கம் 75 வான் தாக்குதல்கள் இடம்பெற்றிருப்பதாக பிரிட்டனைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.
இந்தத் தாக்குதல்கள் சிவப்புக் கோட்டை தாண்டுவதாக உள்ளது என்று எச்சரித்திருக்கும் அபூ முஹமது அல் ஜொலானி என்று அறியப்படும் அல் ஷரா, இது பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரிக்கக் கூடும் என்று தெரிவித்துள்ளார். எனினும் எந்த ஒரு அண்டை நாட்டுடனும் மோதலை சிரியா விரும்பவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.