இந்தியா
புதுச்சேரியில் இஸ்ரேல் இசைக்கலைஞரின் நிகழ்ச்சிக்கு அனுமதி: ரத்து செய்யக் கோரி பா.ஜ.க புகார்

புதுச்சேரியில் இஸ்ரேல் இசைக்கலைஞரின் நிகழ்ச்சிக்கு அனுமதி: ரத்து செய்யக் கோரி பா.ஜ.க புகார்
புதுச்சேரியில், இஸ்ரேல் இசைக்கலைஞரின் நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டதற்கு, பா.ஜ.க இளைஞரணி நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.புதுச்சேரி காலாப்பட்டு அருகே கிழக்கு கடற்கரை சாலையில் மத்திய அரசுக்கு சொந்தமான அசோகா ஹோட்டல் இயங்கி வருகிறது. இங்கு புத்தாண்டை முன்னிட்டு சென்னையை சேர்ந்த யாஷ் ஈவன்ட்ஸ் மூலம், இஸ்ரேல் நாட்டின் இசைக்கலைஞர் அவிஷியின் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.கேரளா, மும்பை ஆகிய இடங்களில் இவரது நிகழ்ச்சிக்கு தடை விதித்துள்ள நிலையில், புதுச்சேரியில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கு பா.ஜ.க இளைஞரணி நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், நிகழ்ச்சியை நடத்துவதற்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என காவல் கண்காணிப்பாளரை சந்தித்து புகார் மனு அளித்தனர். இந்த நிகழ்வின் போது பொதுச்செயலாளர்கள் வருண், கணபதி, துணைத் தலைவர் விஜய், மாநில செயற்குழு உறுப்பினர்கள் பாலாஜி, இளவரசன், ராசு உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில், இஸ்ரேல் கலைஞரின் நிகழ்ச்சி புதுச்சேரியில் நடந்தால் போதை நடமாட்டம் அதிகரிப்பதுடன், கலாசார சீர்கேடு ஏற்படும் என தெரிவித்தனர். மேலும், நிகழ்ச்சி நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்தால், முற்றுகை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.