இந்தியா
“வானத்தில் தென்பட்ட அறிகுறி” – வேத மந்திரங்கள் முழங்க அரசமகன் ஆலய கும்பாபிஷேக விழா கோலாகலம்…

“வானத்தில் தென்பட்ட அறிகுறி” – வேத மந்திரங்கள் முழங்க அரசமகன் ஆலய கும்பாபிஷேக விழா கோலாகலம்…
அரசமகன் ஆலய கும்பாபிஷேக விழா
ராமநாதபுரம் மாவட்டம் கலையூர் புத்தனேந்தல் கிராமத்தில் அருள்பாலிக்கும் அரசமகன் கோவிலின் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. கருடன் வானில் வட்டமடிக்க கலசங்களில் புனித நீர் ஊற்றி ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம் கலையூர் புத்தனேந்தல் கிராமத்தில் அரசமகன் கோவிலானது அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் கோவில் புனரமைப்பு பணிகள் முடிந்த நிலையில், கும்பாபிஷேகம் நடத்த புத்தனேந்தல் கிராம மக்கள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று (டிசம்பர்.16) காலை கோபூஜை தொடங்கி சிறப்பு யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேகம் தொடங்கியது. மூலவருக்கு ஸ்பர்சாகுதி, பூர்ணாகுதியும் சமர்ப்பிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, பூஜை செய்யப்பட்ட புனித நீரை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கோவிலை சுற்றி வலம் வந்து கோபுரத்தின் கலசத்திற்கு வேத மந்திரங்கள் முழங்க புனித நீரை ஊற்றி, பக்தர்கள் மீது தெளித்து கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. பின்பு, மூலவர், சிவகாளி, சப்தகன்னிகள், அரவான் ஆகிய பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.