இந்தியா
”அம்பேத்கரை அவமதித்தது காங்கிரஸ் தான்” : அமித் ஷாவுக்கு ஆதரவாக பிரதமர் மோடி அறிக்கை!

”அம்பேத்கரை அவமதித்தது காங்கிரஸ் தான்” : அமித் ஷாவுக்கு ஆதரவாக பிரதமர் மோடி அறிக்கை!
அம்பேத்கரை அவமதித்த காங்கிரஸின் இருண்ட வரலாற்றை தான் நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா அம்பலப்படுத்தினார் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் அரசியலமைப்பு சட்டம் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று மாநிலங்களவையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எதிர்க்கட்சி எம்.பிக்களை நோக்கி, “’அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்’ என முழக்கமிடுவது இப்போது ஃபேஷன் ஆகிவிட்டது. இதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால், அடுத்த 7 ஜென்மத்திற்கு சொர்க்கத்திலாவது அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும்” என விமர்சித்தார்.
சர்ச்சைக்குரிய அவரது இந்த பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுனா கார்கே, ராகுல்காந்தி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இந்தியா கூட்டணி எம்.பிக்கள் அமித் ஷாவை மன்னிப்பு கேட்க கோரி அமளியில் ஈடுப்பட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று முடங்கியது.
இந்த நிலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு ஆதரவாக பிரதமர் மோடி இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “காங்கிரஸும் அதன் கூட்டணி கட்சியினரும் தங்களின் தீங்கிழைக்கும் பொய்களால் பல வருடங்களாக செய்த தவறுகளை, குறிப்பாக டாக்டர் அம்பேத்கரை அவமதித்ததை மறைக்க முடியும் என்று தவறாக நினைக்கிறார்கள்.
அம்பேத்கரின் பாரம்பரியத்தை அழிக்கவும், SC/ST சமூகங்களை அவமானப்படுத்தவும், ஒரு வம்சத்தின் தலைமையில் ஒரு கட்சி எப்படி எல்லாவிதமான கேடுகெட்ட தந்திரங்களிலும் ஈடுபட்டது என்பதை இந்திய மக்கள் மீண்டும் மீண்டும் பார்த்திருக்கிறார்கள்.
🔴அவரை ஒரு முறை அல்ல இரண்டு முறை தேர்தலில் தோற்கடித்தது.
🔴நேரு அவருக்கு எதிராக பிரச்சாரம் செய்து அவரது தோல்வியை கௌரவப் பிரச்சினையாக எண்ணினார்.
🔴அவருக்கு பாரத ரத்னா மறுக்கப்பட்டது.
🔴பாராளுமன்றத்தின் மைய மண்டபத்தில் அவரது உருவப்படம் அமைக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
காங்கிரஸ் அவர்கள் விரும்பியபடி எப்படி வேண்டுமானாலும் முயற்சி செய்யட்டும். ஆனால் அவர்களின் ஆட்சியில் SC/ST சமூகங்களுக்கு எதிரான மிக மோசமான படுகொலைகள் நடந்துள்ளன என்பதை மறுக்க முடியாது.
பல ஆண்டுகளாக, காங்கிரஸ் ஆட்சியில் அமர்ந்திருந்தாலும், SC மற்றும் ST சமூகங்களுக்கு அதிகாரம் அளிக்க எந்த ஒரு விஷயத்தையும் செய்யவில்லை.
அம்பேத்கரை அவமதித்த மற்றும் SC/ST சமூகங்களைப் புறக்கணித்த காங்கிரஸின் இருண்ட வரலாற்றை நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா அம்பலப்படுத்தினார். அவர் முன்வைத்த உண்மைகளால் காங்கிரஸ் கட்சியினர் திகைத்துவிட்டார்கள். அதனால்தான் அவர்கள் இப்போது நாடகங்களில் ஈடுபடுகிறார்கள்.
நாம் இன்று என்னவாக இருக்கிறோம் என்பதற்கு டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரே காரணம். கடந்த பத்தாண்டுகளாக அம்பேத்கரின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்ற நமது அரசு அயராது உழைத்துள்ளது.
🛑25 கோடி மக்களை வறுமையில் இருந்து அகற்றுவது, எஸ்சி/எஸ்டி சட்டத்தை வலுப்படுத்துவது, தூய்மை இந்தியா, பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா, ஜல் ஜீவன் மிஷன், உஜ்வாலா யோஜனா போன்ற நமது அரசின் முதன்மைத் திட்டங்களான எந்தத் துறையாக இருந்தாலும், அவை ஒவ்வொன்றும் ஏழை மற்றும் ஒதுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை தொட்டவை.
🛑அம்பேத்கருடன் தொடர்புடைய ஐந்து முக்கிய இடங்களான பஞ்சதீர்த்தை மேம்படுத்த எங்கள் அரசு பாடுபட்டுள்ளது.
🛑பல தசாப்தங்களாக சைத்ய பூமிக்கான நிலம் தொடர்பான பிரச்சினை நிலுவையில் உள்ளது. எங்கள் அரசாங்கம் பிரச்சினையைத் தீர்த்தது மட்டுமல்ல, நான் அங்கு பிரார்த்தனையும் செய்யச் சென்றேன்.
🛑அம்பேத்கர் தனது கடைசி ஆண்டுகளை கழித்த டெல்லியில் உள்ள 26, அலிபூர் சாலையையும் நாங்கள் உருவாக்கியுள்ளோம்.
🛑லண்டனில் அவர் வசித்த வீடும் அரசால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
டாக்டர் அம்பேத்கரைப் பொறுத்தவரை, பாஜகவின் மரியாதை முழுமையானது” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.