விளையாட்டு
சென்னை திரும்பிய சதுரங்க ராஜா குகேஷிற்கு மலர்தூவி உற்சாக வரவேற்பு

சென்னை திரும்பிய சதுரங்க ராஜா குகேஷிற்கு மலர்தூவி உற்சாக வரவேற்பு
சிங்கப்பூரில் நடந்து முடிந்த உலக செஸ் சாம்பியன்ஷிப்பின் கடைசி சுற்றில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனை வீழ்த்தி பட்டம் வென்று குகேஷ் வரலாற்று சாதனை படைத்தார். இதன்மூலம் மிக இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்து தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்தார். இந்நிலையில், குகேஷ் சிங்கப்பூரில் இருந்து இன்று காலை சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவருக்கு தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. சாம்பியன் கோப்பையுடன் தாயகம் திரும்பிய குகேஷுக்கு அதிகாரிகள் பூங்கொடுத்து வழங்கி வரவேற்றனர்.
இந்நிலையில், குகேஷ் சென்னை விமான நிலையத்தில் இருந்து நேராக தான் படித்த முகப்பேரில் உள்ள வேலம்மாள் பள்ளிக்குச் சென்றார். அங்கு குகேஷுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. குகேஷூக்கு பள்ளி நிர்வாகிகள் ஆள் உயர மாலை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய குகேஷ், இளம் வயதில் உலக சாம்பியன் ஆனது மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்தார். சர்வதேச வீரர்களுடன் ஒப்பிடுகையில் குகேஷ் அதிகளவிலான போட்டிகளில் பங்கேற்று வந்ததாகவும், இதுவே அவரது வெற்றிக்கு காரணம் என்றும் அவரது தந்தை ரஜினிகாந்த் தெரிவித்தார். மேலும் பொருளாதார ரீதியாக தமிழ்நாடு அரசு நல்ல ஒத்துழைப்பு வழங்கியதாகவும் அவர் கூறினார்.
இந்நிலையில், சென்னை கொரட்டூர் பகுதியில் உள்ள குகேஷின் வீட்டு முன்பு உறவினர்கள் குவிந்தனர். அவர்கள் மேளதாளம் முழங்க நடனமாடி மகிழ்ந்தனர்.