இந்தியா
பிச்சைக்காரர்களுக்கு காசு கொடுத்தால் உங்கள் மீது வழக்கு பாயும்… இந்தியாவில்தான் இந்த அதிரடி நடவடிக்கை…

பிச்சைக்காரர்களுக்கு காசு கொடுத்தால் உங்கள் மீது வழக்கு பாயும்… இந்தியாவில்தான் இந்த அதிரடி நடவடிக்கை…
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில்தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இந்தியாவின் தூய்மையான நகரமாக இந்தூரை மாற்றுவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனை உறுதி செய்யும் விதமாக வரும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் இந்தூரில் பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுப்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்ற அறிவிப்பை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “இந்தூரில் பிச்சை எடுப்பதைத் தடை செய்து நிர்வாகம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது. பிச்சை எடுப்பதற்கு எதிரான எங்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் இந்த மாத இறுதி வரை தொடரும். ஜனவரி 1 முதல் யாராவது பிச்சைக்காரர்களுக்கு காசு கொடுப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும். மக்களுக்கு பிச்சை கொடுப்பதன் மூலம் பாவத்தில் பங்குதாரர்களாக மாற வேண்டாம் என்று இந்தூரில் வசிப்பவர்கள் அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் மத்திய அரசின் முன்னோடித் திட்டத்தின் கீழ் இந்தூர் தெருக்களை பிச்சைக்காரர்கள் இல்லாத தெருவாக மாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த திட்டம் டெல்லி, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், இந்தூர், லக்னோ, மும்பை, நாக்பூர், பாட்னா மற்றும் அகமதாபாத் ஆகிய 10 நகரங்களிலும் செயல்படுத்தப்படவுள்ளது.
இந்தூர் மாவட்ட நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை குறித்து மாவட்ட திட்ட அலுவலர் தினேஷ் மிஸ்ரா சில திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “நாங்கள் பிச்சைக்காரர்கள் குறித்த அறிக்கைகளை தயாரித்தபோது, சில பிச்சைக்காரர்கள் வீடு வைத்திருப்பதையும், சிலரின் குழந்தைகள் வங்கியில் வேலை செய்வதையும் கண்டுபிடித்தோம். ஒரு முறை பிச்சைக்காரரிடம் ரூ.29,000 கிடைத்தது. மற்றொரு பிச்சைக்காரர் கடனாகப் பணம் கொடுத்து வட்டிக்குப் பணம் வாங்கினார். ஒரு கும்பல் இங்கு பிச்சை எடுப்பதற்காக ராஜஸ்தானைச் சேர்ந்த குழந்தைகளுடன் ஓட்டலில் ரூம் எடுத்து தங்கியிருந்தது” என்று தெரிவித்தார்.