இந்தியா
அதிமுக பொதுச்செயலாளர் பதவி… எடப்பாடி பழனிசாமி வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

அதிமுக பொதுச்செயலாளர் பதவி… எடப்பாடி பழனிசாமி வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரித்தை ரத்து செய்யக் கோரி, அதிமுக உறுப்பினர்களான ராம்குமார் ஆதித்தன் மற்றும் சுரேன் பழனிச்சாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். அதில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, 2022 ஆம் ஆண்டு அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவதை தடுக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாகவும்,
இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. கட்சியின் எதிர்காலம் மற்றும் தொண்டர்களின் உரிமையை பாதுகாக்கும் வகையில், எடப்பாடி பழனிச்சாமியை பொதுச் செயலாளராக அங்கீகரித்ததை மறு பரிசீலனை செய்யக்கோரி தேர்தல் ஆணையத்திடம் மனுக்கள் அளித்துள்ளதாக தெரிவித்தனர்.
இவ்வழக்கு நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியன் மற்றும் சி.குமரப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க கூடாது என்ற கோரிக்கையுடன் அளித்த மனுவை பரிசீலித்து நான்கு வாரங்களில் முடிவெடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கு விளம்பரத்துக்காக தொடரப்பட்டுள்ளதாக கூறிய நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்தனர்.