இலங்கை
திரைமறைவு ஒப்பந்தம் இந்தியாவுடன் இல்லை; வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு!

திரைமறைவு ஒப்பந்தம் இந்தியாவுடன் இல்லை; வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு!
இலங்கைக்குப் பாதகத்தை ஏற்படுத்தும் வகையில் இந்தியாவுடன் எந்தவொரு ஒப்பந்தமும் கைச்சாத்தாகவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் நேற்றைய அமர்வின்போது, ‘ஜனாதிபதி அநுரகுமாரவின் இந்தியப் பயணத்தில், இலங்கைக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வகையிலான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளனவா?’ என்று நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார கேள்வி எழுப்பினார். இதற்குப் பதில் வழங்கும்போதே, ‘அவ்வாறு எந்தவொரு பாதகமான ஒப்பந்தங்களும் கைச்சாத்தாகவில்லை’ என்று அமைச்சர் விஜித ஹேரத் கூறியுள்ளார்.
இதையடுத்து, ‘எமது நாட்டு சக்தியை இந்தியாவுடன் இணைப்பது, இந்திய ரூபாவின் பயன்பாட்டை அனுமதிப்பது உள்ளிட்ட விடயங்களுக்கு ரணிலுக்கு ஆணை வழங்கியது யாரென இதற்கு முன்னர் அநுரகுமார திஸாநாயக்க கேள்வி எழுப்பி இருந்தார். எனவே, ரணிலின் நிகழ்ச்சி நிரலை இந்தியாவுடன் செயல்படுத்துவதற்கு தற்போதைய அரசுக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளதா?’ என்றும் நளின் பண்டார எம்.பி. வினவியுள்ளார்.
இதற்கு பதிலளித்த வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், ‘அநுரகுமார திஸாநாயக்கவுக்கு மக்கள் ஆணை கிடைத்துள்ளது. ரணிலுக்கு ஆணை கிடைக்கவில்லை. இலங்கையில் நாம் சக்தியை உற்பத்தி செய்வோம். மேலதிகமாக இருப்பவற்றை பொருளாதார ஒத்துழைப்பின் அடிப்படையில் பிம்ஸ்டெக் வலய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வோம். இது நாட்டுக்கு நன்மை பயக்ககூடிய விடயம். வருமானமும் கிட்டும்’ என்று தெரிவித்தார். (ச)