இந்தியா
மாணவியை 15 முறை கடித்த எலி… தடுப்பூசி போட்டதால் வந்த புதிய சிக்கல் – அதிர்ச்சி சம்பவம்!

மாணவியை 15 முறை கடித்த எலி… தடுப்பூசி போட்டதால் வந்த புதிய சிக்கல் – அதிர்ச்சி சம்பவம்!
தெலங்கானா மாநிலம், கம்மம் மாவட்டம், தானவாய்குடத்தில் அரசு விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் தங்கி ஏராளமான மாணவிகள் அரசுப் பள்ளியில் படித்து வருகின்றனர். லக்ஷ்மி பவானி கீர்த்தி என்ற மாணவி இந்த விடுதியில் தங்கி 10ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் விடுதிக்குள் நாளுக்கு நாள் எலித் தொல்லை அதிரித்து வந்ததாக மாணவிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர். இரவு நேரத்தில் விடுதிக்குள் ஏராளமான எலிகள் புகுந்து மாணவிகளை கடித்து வைப்பதாகவும் குற்றம்சாட்டினர்.
இதில் மாணவி கீர்த்தியை கடந்த மார்ச் மாதம் முதல் நவம்பர் வரை 8 மாதங்களில் சுமார் 15 முறை எலி கடித்திருப்பது தெரியவந்துள்ளது. ஒவ்வொரு முறை எலி கடித்தபோதும் மாணவிக்கு ரேபிஸ் தடுப்பு ஊசி போடப்பட்டதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து எலி கடித்ததால் அவருக்கு செலுத்தப்பட்ட மருந்துகள் எதிர்வினையாற்றி உள்ளன. இதனால் கீர்த்திக்கு பக்கவாதம் ஏற்பட்டு ஒரு கை மற்றும் ஒரு கால் செயல்படாமல் விழுந்துவிட்டதாக கூறப்படுகிறது.
முன்னாள் அமைச்சர் புவ்வாடா அஜய் குமாரின் தலையீட்டுக்கு பின்னர், மாணவி தற்போது மம்தா பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கீர்த்தியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு, குணமடைந்து வரும் நிலையில், நரம்பியல் பிரச்சனையால் அவதிப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அரசு விடுதியில் தங்கியிருந்த மாணவி எலிக்கடியால் பாதிக்கப்பட்ட சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.