இந்தியா
பெற்ற குழந்தைகளின் கழுத்தை அறுத்து கொல்ல முயற்சி.. தாய் எடுத்த விபரீத முடிவு.. சென்னையில் பயங்கரம்
பெற்ற குழந்தைகளின் கழுத்தை அறுத்து கொல்ல முயற்சி.. தாய் எடுத்த விபரீத முடிவு.. சென்னையில் பயங்கரம்
சென்னை, கீழ்ப்பாக்கம், புல்லாபுரத்தைச் சேர்ந்தவர் திவ்யா. இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் முடிந்தது. திவ்யாவிற்கு, லக்சன் குமார் மற்றும் புனித்குமார் என இரு ஆண் குழந்தைகள் பிறந்தனர்.
கருத்து வேறுபாட்டின் காரணமாக திவ்யாவின் கணவர், அவரை விட்டு பிரிந்து தனியே வாழ்ந்துவருவதாக சொல்லப்படுகிறது. திவ்யா, தனது இரு மகன்களுடன் புல்லாபுரத்தில் தனியாக வசித்துவந்தார்.
இன்று திடீரென திவ்யா வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து திவ்யா வீட்டின் அருகே இருந்தவர்களும், உறவினர்களும் அவரது வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது திவ்யா, அவரின் ஒன்றரை வயது மகன் புனித்குமார் மற்றும் 4 வயது மகன் லக்சன் குமார் ஆகிய மூவரும் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து அலறிக்கொண்டிருந்தனர்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனடியாக அவர்களை மீட்டு கீழ்ப்பாக்கம்அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மேலும், இது குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்தத் தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் திவ்யா, தனது இரு மகன்களின் கழுத்தறுத்து விட்டு, அவரும் கழுத்தறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. மேலும், திவ்யா ஏன் இந்த முடிவை எடுத்தார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
திவ்யா, புனித்குமார் மற்றும் லக்சன் குமார் ஆகிய மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அவரின் ஒன்றரை வயது இளைய மகன் புனித்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியாகியுள்ளார். தற்போது திவ்யாவிற்கும் அவரது மூத்த மகன் லக்சன் குமாருக்கும் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.