இலங்கை
பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தல் விடயத்தில் அனுர அரசாங்கத்தின் செயற்பாடுகளை பாராட்டும் பிரித்தானியா!

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தல் விடயத்தில் அனுர அரசாங்கத்தின் செயற்பாடுகளை பாராட்டும் பிரித்தானியா!
ஆட்சிக்கு வந்து குறுகிய காலத்துக்குள் பொருளாதார ஸ்திரப்படுத்தல் விடயத்தில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள முன்னேற்றத்தை பாராட்டியே ஆக வேண்டும் என இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பேட்ரிக் கூறுகிறார்.
நிதி மற்றும் கொள்வனவு பிரதியமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமவுடன் நேற்று (20) நிதியமைச்சில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பிரித்தானிய சந்தைக்கு இலங்கை பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு அதிகபட்ச ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாக உயர்ஸ்தானிகர் இதன்போது உறுதியளித்துள்ளார்.
அதேநேரம் வர்த்தக வாய்ப்புகளை அடையாளம் காணுவதற்காக அடுத்த வருடத்தின் ஆரம்பத்தில் சிறப்பு குழுவொன்றும் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கரிம விவசாயப் பயிர்களை ஏற்றுமதி செய்வதற்கு உள்நாட்டு சந்தையில் அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும், ஆடைகள், விவசாயப் பொருட்கள் மற்றும் இயற்கை அழகு சாதனப் பொருட்கள் போன்ற பல்வேறு பொருட்களுக்கு நாட்டின் சந்தையில் இடமிருப்பதாகவும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் பிரித்தானிய பிரஜைகள் முன்னணி இடத்தைப் பிடிப்பதால், அதிக அளவு அந்நிய செலாவணி நாட்டிற்கு கொண்டு வரப்படுவதாகவும் அவர் குறிப்பிட்ட அவர், சர்வதேச இறையாண்மை பத்திர மறுசீரமைப்பு செயல்முறை மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் செயற்படும் விதத்தையும் பாராட்டியுள்ளா்.