இந்தியா
சுனாமி 20ம் ஆண்டு நிறைவு; நெய்தல் மக்களின் ஆய்வு நூல் ‘துறையாடல்’ வெளியீடு

சுனாமி 20ம் ஆண்டு நிறைவு; நெய்தல் மக்களின் ஆய்வு நூல் ‘துறையாடல்’ வெளியீடு
இந்தியப் பெருங்கடலில் சுனாமி வந்து 20 ஆண்டுகள் நிறைவுபெறும் நிலையில், கடல்வெளி பதிப்பகமும், காக்கைகூடும் இணைந்து நேற்று (21ஆம் தேதி) மாலை 5 மணிக்கு சென்னை கவிக்கோ அரங்கில் சென்னையில் 20ஆம் ஆண்டு சுனாமி நினைவேந்தல்.. – “துறையாடல்” புத்தகம் வெளியீடு! என்ற புத்தகத்தை வெளியிட்டனர்.
இந்த புத்தக வெளியீட்டு விழாவிற்கு ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியும், சிந்துவெளி ஆய்வாளருமான ஆர்.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சுனாமியின் 20ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வாகவும் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
கடல்வெளி பதிப்பகத்தால் ‘துறையாடல்’ என்ற தலைப்பில் வெளிவந்துள்ள இந்த நூல், 2004 ஆம் ஆண்டு சுனாமிக்குப் பிறகு கடந்த 20 ஆண்டுகளில், தமிழக கடற்கரை ஓரங்களில் இந்த நூலின் ஆசிரியர் டாக்டர். வறீதையா கான்ஸ்தந்தின் மேற்கொண்ட பயணங்களையும், கடல்வாழ் உயிரினங்கள் தொடர்பான நிபுணர்கள் மற்றும் கவனிப்பாளர்களுடன் அவர் மேற்கொண்ட உரையாடல்களையும் அடிப்படையாகக் கொண்டு 976 பக்கங்களில் இந்த புத்தகம் தயாராகி உள்ளது.
விழாவில் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் ஆசிரியர் கார்த்திகைச்செல்வன், திரைப்பட இயக்குநர் கோபி நயினார், ஆய்வாளர் கீதா உள்ளிட்டோர் உரை நிகழ்த்தினர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலகிருஷ்ணன், பேரிடர் மேலாண்மை என்பது அரசை மட்டுமே சார்ந்தது இல்லை என்றும், அது மக்களின் கூட்டு முயற்சி எனவும் தெரிவித்தார். மேலும், இந்தியாவில் 10 ஆயிரம் பேர் புயலில் இறந்து போனது சர்வ சாதாரணமாக நடந்ததாகக் கூறினார். மேலும், ‘துறையாடல்’ நூல், நெய்தல் நிலத்தின் ஆவணம் என்றும் புகழாரம் சூட்டினார்.