இந்தியா
திட்டமிட்டு பீப் தவிர்ப்பு; உணவு திருவிழாவில் மீண்டும் வெடித்துள்ள சர்ச்சை.. உண்மை என்ன?

திட்டமிட்டு பீப் தவிர்ப்பு; உணவு திருவிழாவில் மீண்டும் வெடித்துள்ள சர்ச்சை.. உண்மை என்ன?
நகர்புற வாழ்வாதார இயக்ககத்தின் சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் உணவுத் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த உணவு திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 20ம் தேதி தொடங்கி வைத்து, உணவுகளை ருசித்தார்.
மகளிர் சுய உதவிக்குழுக்களின் கைவண்ணத்தில் இங்கு, மதுரை கறிதோசை, விருதுநகர் கரண்டி ஆம்லெட், நாமக்கல் பள்ளிபாளையம் சிக்கன் உள்ளிட்ட 286 வகையான சைவ, அசைவ உணவுகள் கிடைக்கின்றன.
65 சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட மகளிர், சுத்தமாகவும், சுவையாகவும், சுகாதாரமான முறையிலும், கலப்படம் இல்லாமல் 35 அரங்குகளில் உணவுகளை பரிமாறி வருகின்றனர்.
குறிப்பாக கோவை கொங்கு பிரியாணி தொடங்கி, கொல்லிமலை முடவாட்டுக்காங் கிழங்கு, பள்ளிபாளையம் சிக்கன், சேலம் தட்டுவடை செட், நெல்லை அல்வா, விருதுநகர் பால்கோவா முதல், பனை பாயாசம், வெற்றிலை பாயாசம் என வித்தியாசமான உணவு வகைகளும் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
சுடச்சுட உணவுகள் மட்டுமின்றி ஆயத்த உணவுகளான ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா, திருவண்ணாமலை சிமிலி உள்ளிட்ட 520 ஆயத்த உணவுகளும் FSSAI தரச்சான்றுடன் இந்த உணவுத் திருவிழாவில் இடம்பிடித்துள்ளன. இதற்கென பிரத்யேகமாக 7 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. உணவு மட்டுமின்றி 3 அரங்குகளில் சுய உதவிக்குழுவினரின் கைவினைப் பொருட்களும் வைக்கப்பட்டுள்ளன.
கடந்த 21ம் தேதி முதல் நடந்துவரும் இந்த உணவு திருவிழா வரும் 24 ஆம் தேதி வரை பகல் 12.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறுகிறது. இந்த உணவுத் திருவிழாவில் கலந்து கொள்ள அனுமதி இலவசம். அதே போல் பொதுமக்கள் குடும்பத்தினருடன் வந்து உணவுத் திருவிழாவை கொண்டாடும் வகையில் தப்பாட்டம், கரகாட்டம், மயிலாட்டம், புலியாட்டம் போன்ற நடனங்களும் இடம்பெற இருக்கின்றன.
இந்த உணவுத் திருவிழாவில், மாட்டிறைச்சியை மட்டும் புறக்கணிக்கப்பட்டதாக நீலம் பண்பாட்டு மையம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து நீலம் பண்பாட்டு மையம் தனது எக்ஸ் பக்கத்தில், “சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்று வரக்கூடிய உணவுத் திருவிழாவில் மாட்டிறைச்சியை மட்டும் புறக்கணிக்க வேண்டிய அவசியம் என்ன? பெருமளவிலான மக்கள் பீப் சாப்பிட கூடியவர்கள். ஆனால், திட்டமிட்டே ஓர் உணவை புறக்கணிக்கப்படுவதை நீலம்பண்பாட்டுமையம் வன்மையாகக் கண்டிக்கிறது” என்று பதிவிடப்பட்டுள்ளது.
#சென்னை_மெரினா கடற்கரையில் நடைபெற்று வரக்கூடிய உணவுத் திருவிழாவில் மாட்டிறைச்சியை மட்டும் புறக்கணிக்க வேண்டிய அவசியம் என்ன?
பெருமளவிலான மக்கள் பீப் சாப்பிட கூடியவர்கள்.
ஆனால், திட்டமிட்டே ஓர் உணவை புறக்கணிக்கப்படுவதை #நீலம்பண்பாட்டுமையம்
வன்மையாகக் கண்டிக்கிறது.… pic.twitter.com/yGBWE6DSHa
முன்னதாக கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் வேலூர் மாவட்டம், ஆம்பூர் நகரில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மே 13, 14, 15 என மூன்று நாட்கள் ஆம்பூர் வர்த்தக மையத்தில் பிரியாணி திருவிழா நடந்தது. அதில் பீப் பிரியாணி இடம் பெறாதது பெரும் சர்ச்சையாக மாறியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சென்னை உணவுத் திருவிழாவில் பீப் கறியும் விற்கப்பட்டு வருகிறது. பிரதான பட்டியலில் பீப் விற்பனை குறித்து இடம் பெறாத நிலையில், உணவுத் திருவிழா அரங்கத்தில் பீப் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது தொடர்பான வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகிறது.