சினிமா
விவாகரத்து வழக்கில் நீதிமன்ற உத்தரவு: ஜெயம் ரவி – ஆர்த்தி ஒரு மணி நேரமாக பேச்சுவார்த்தை!

விவாகரத்து வழக்கில் நீதிமன்ற உத்தரவு: ஜெயம் ரவி – ஆர்த்தி ஒரு மணி நேரமாக பேச்சுவார்த்தை!
நடிகர் ஜெயம் ரவி, ஆர்த்தியை காதலித்து கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். 15 ஆண்டுகால திருமண உறவில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணத்தால், இருவரும் தற்போது தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு ஜெயம் ரவி சமீபத்தில் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை மூன்றாவது குடும்ப நல நீதிமன்றம், சமரச தீர்வு மையத்தில் பேச்சு வார்த்தை நடத்த உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு குடும்ப நல நீதிமன்றம் நீதிபதி தேன்மொழி முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி நேரில் ஆஜராகினர். அப்போது, மத்தியஸ்தர் நேரில் ஆஜராகி, இன்னும் சமரச பேச்சுவார்த்தை முடியவில்லை என தெரிவித்தார்.
இதையடுத்து, சமரச தீர்வு மையத்தில் மனம் விட்டு பேசும்படி ஜெயம்ரவி மற்றும் ஆர்த்திக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜனவரி 18ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
இந்த உத்தரவை அடுத்து, வழக்கு மீண்டும் சமரச தீர்வு மையத்தில் வந்தபோது, ஜெயம்ரவி மற்றும் ஆர்த்தி நேரில் ஆஜராகி சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தினர்.