இலங்கை
திருகோணமலையில் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வு!

திருகோணமலையில் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வு!
பாலின உணர்திறனை மேம்படுத்தல் என்ற தொனிப் பொருளில், திருகோணமலை மாவட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட செயலமர்வொன்று திருகோணமலை நகரில், தனியார் விடுதியில் நேற்றையதினம் நடைபெற்றது.
சட்ட அமுலாக்கம் தொடர்பாக பாலின அடிப்படையிலான வன்முறைக்கான அணுகல் சேவையை மேம்படுத்துதல் மற்றும் அதற்கான ஆதரவு அமைப்பை வலுப்படுத்துதல் தொடர்பான உள்ளடக்கங்களை இந்த செயலமர்வு கொண்டிருந்தது.
இதனை E- wing எனப்படும் பெண்கள் மற்றும் சிறுவர்களை மேம்படுத்துவதற்கான திருகோணமலை சுயாதீன மையம் ஏற்பாடு செய்திருந்தது.
இந்த செயலமர்வில், மாவட்டத்தில் உள்ள, ஒன்பது பொலிஸ் பிரிவுகளை சேர்ந்த 31 பொலிஸ் உத்தியோகத்தர்களும், நான்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
இதன் வளவாளராக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி கலந்துகொண்டார்.
மேலும் பாலின சமத்துவம், பெண்களின் அதிகாரம், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு கல்வி, சுகாதாரம், அரசியல், பொருளாதார முடிவெடுக்கும் செயல்முறைகளில் சமஉரிமை,பெண் சமத்துவம் தொடர்பான புதிய சட்டதிட்டங்களை நடைமுறைப்படுத்தல், பெண்களை இலக்காகக் கொண்ட தீங்கு விளைவிக்கும் நடைமுறைகளை ஒழித்தல், பெண்கள் எதிர் நோக்கும் பாலின ரீதியான சம்பவங்கள் மற்றும் அதனை தடுக்க வேண்டிய அணுகுமுறைகள் உட்பட பல விடயங்கள் வளவாளரால் தெளிவூட்டப்பட்டது.[ஒ]