இலங்கை
மஹிந்தாவை இலக்கு வைத்து ட்ரோன் தாக்குதல் அச்சுறுத்தல்- பொதுஜன பெரமுன குற்றஞ்சாட்டு

மஹிந்தாவை இலக்கு வைத்து ட்ரோன் தாக்குதல் அச்சுறுத்தல்- பொதுஜன பெரமுன குற்றஞ்சாட்டு
மஹிந்த ராஜபக்சவை இலக்கு வைத்து ட்ரோன் தாக்குதல் அச்சுறுத்தல் உள்ளதுடன் அவருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பாலும் அச்சுறுத்தல் உள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன குற்றஞ்சாட்டியுள்ளது.
மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு ஜனாதிபதி அநுர தலைமையிலான அரசாங்கத்தால் சடுதியாகக் குறைக்கப்பட்டுள்ளதையடுத்தே, மஹிந்தவுக்கு இன்னமும் பல்வேறுபட்ட உயிரச்சுறுத்தல் உள்ளது என்றும், அவருடைய பாதுகாப்புக் குறைக்கப்பட்டமை தவறான நடவடிக்கை என்றும் பெரமுன கூறியுள்ளது.
இது தொடர்பில் பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தரும் சட்டத்தரணியுமான மனோஜ் கமகே தெரிவிக்கையில்;
முன்னாள் ஜனாதிபதிக்குரிய இராணுவப் பாதுகாப்பு நேற்று முதல் நீக்கப்பட்டுள்ளது. புலிகள் அமைப்புக்கு முடிவுகட்டிய மஹிந்த ராஜபக்சவுக்குரிய இராணுவப் பாதுகாப்பு முழுமையாக நீக்கப்பட்டமையானது அவரின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
முக்கியஸ்தர்களின் பாதுகாப்பு தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவானது மஹிந்த ராஜபக்சவுக்கு உள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பில் அறிக்கையொன்றை கோரியிருந்தது. 5ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பாக உள்ள அதிகாரியால் மேற்படி குழுவுக்கு அறிக்கை அனுப்பிவைக்கப்பட்டது.
13 புலனாய்வு அறிக்கைகளை மேற்கோள்காட்டி மஹிந்த ராஜபக்சவுக்குள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல் பற்றியும், அவருக்கு ஏன் பாதுகாப்பு குறைக்கப்படக்கூடாது என்பது பற்றியும் பாதுகாப்புப் பிரிவு பணிப்பாளரால், முக்கியஸ்தர்களின் பாதுகாப்புத் தொடர்பில் மறுபரிசீலனை செய்த குழுவுக்குத் தெளிவூட்டப்பட்டிருந்தது.
ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு, புலிகள் அமைப்பு மற்றும் பாதாளக் குழுக்கள் உள்ளிட்ட தரப்புகளால் மஹிந்த ராஜபக்சவுக்கு ஏற்பட்டிருந்த அச்சுறுத்தல் நீங்கவில்லை என்ற தெளிவான விளக்கம் வழங்கப்பட்டும், மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது.
எனவே, மஹிந்த ராஜபக்சவுக்கு ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்பட்டால் அதற்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சும், அரசாங்கமுமே பொறுப்பேற்க வேண்டும். போருக்கு முடிவுகட்டி, படையினரின் சடலங்கள் கிராமங்களுக்கு வருவதை தடுத்த தலைவர்தான் மஹிந்த ராஜபக்ச. அவருக்கு ஆயிரம் பேரை பாதுகாப்புக்கு வழங்கினால்கூட அதில் தவறு இருக்காது –என்றார். (ச)