Connect with us

உலகம்

காசா போர் நிறுத்த உடன்பாடு தொடர்பில் இஸ்ரேல், பலஸ்தீன தரப்புகள் நம்பிக்கை!

Published

on

Loading

காசா போர் நிறுத்த உடன்பாடு தொடர்பில் இஸ்ரேல், பலஸ்தீன தரப்புகள் நம்பிக்கை!

காசாவில் போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதற்கான இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான இடைவெளி குறைந்து இருப்பதாக பலஸ்தீன மற்றும் இஸ்ரேலிய தரப்புகள் நம்பிக்கை தெரிவித்துள்ளன. எனினும் இரு தரப்புக்கும் இடையிலான தீர்க்கமான வேறுபாடுகள் நீடிப்பதாக கூறப்படுகிறது.

காசாவில் இஸ்ரேலின் உக்கிர தாக்குதல்கள் நீடித்து வரும் சூழலில் போரை முடிவுக்குக் கொண்டுவரும் புதிய முயற்சிகளில் மத்தியஸ்தம் வகிக்கும் நாடுகளான எகிப்து, கட்டார் மற்றும் அமெரிக்கா ஈடுபட்டு வருகின்றன. இது தொடர்பில் முன்னேற்றங்கள் எட்டப்பட்டு வருவதாக செய்திகள் வெளியானபோதும் இதுவரை இழுபறி முடிவுக்கு வரவில்லை.

Advertisement

 

காசாவில் உள்ள பணயக்கைதிகளை விடுவிப்பது தொடர்பில் ஹமாஸுடனான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடந்த திங்களன்று குறிப்பிட்டார். எனினும் இதற்கு எத்தனை காலம் எடுத்துக் கொள்ளும் என்பது குறித்து உறுதி செய்யப்படவில்லை.

இஸ்ரேலிய பாராளுமன்றத்தில் உரையாற்றிய நெதன்யாகு, ‘பல்வேறு முனைகளிலும் இஸ்ரேல் இராணுவ ரீதியில் பாரிய அடைவுகளை பெற்றிருப்பதோடு ஹமாஸ் மற்றும் அதன் தலைவர்கள் மீதான இராணுவ அழுத்தம் அவர்களின் முந்தைய கோரிக்கைகளை மென்மையாக்கக் காரணமாகியுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

 

போர் நிறுத்தத்தின் சில முட்டுக்கட்டையான விடயங்கள் தீர்க்கப்பட்டிருப்பதாக இந்தப் பேச்சுவார்த்தையுடன் தொடர்புபட்ட பலஸ்தீன அதிகாரி ஒருவர் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார். இதில் காசாவில் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கு பகரமாக இஸ்ரேலிய சிறையில் உள்ள விடுவிக்கப்பட வேண்டிய பலஸ்தீன கைதிகள் தொடர்பில் இன்னும் உடன்பாடு எட்டப்படவில்லை என்றும் காசாவில் இஸ்ரேலிய துருப்புகளை நிலைநிறுத்துவது தொடர்பிலும் உடன்பாடு எட்டப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவரது இந்தக் கருத்தை பிரதிபலிப்பதாக இஸ்ரேலிய புலம்பெயர்ந்தோர் அமைச்சர் அமிச்சாய் சிக்லி, இந்த இரு விடயங்கள் தொடர்பிலும் பேச்சுவார்த்தை இடம்பெற்று வருவதாக குறிப்பிட்டுள்ளார். எனினும் கடந்த பல மாதங்களில் இல்லாத அளவில் உடன்படிக்கை ஒன்றை நெருங்கி இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

 

‘இந்த போர் நிறுத்தம் ஆறு மாதங்கள் அல்லது 10 ஆண்டுகள் வரை நீடிக்கக் கூடும். இது களத்தில் உள்ள நிலையை பொறுத்தது’ என்று இஸ்ரேலின் ‘கான்’ வானொலிக்கு அளித்த பேட்டியில் சிக்லி குறிப்பிட்டுள்ளார். காசாவில் சண்டை நின்றதும் அங்கு எந்த சக்தி நிர்வகிப்பது மற்றும் மறுசீரமைப்பை முன்னெடுப்பது தொடர்பில் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிப்பதாக அவர் கூறியுள்ளார்.

கடந்த காலங்களில் தோல்வியுற்ற பல சுற்று போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளில் போர் நிறுத்த காலம் இழுபறிக்கு காரணமான முக்கிய விடயமாக இருந்து வந்தது.

Advertisement

போரை முடிவுக்குக் கொண்டுவர ஹமாஸ் விரும்பும் அதேநேரம், காசாவில் ஹமாஸின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேல் விரும்புகிறது.

‘போரை முடிப்பதற்கான விடயங்கள் இன்னும் முழுமையாக தீர்க்கப்படவில்லை’ என்று பலஸ்தீன அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

நெதன்யாகுவின் பாதுகாப்பு அமைச்சரவை உறுப்பினர் ஒருவரான இஸ்ரேலிய அமைச்சர் சீவ் எல்கின், இஸ்ரேலிய இராணுவ வானொலிக்கு கூறியதாவது, போர் நிறுத்த உடன்படிக்கையின் இரண்டாவது கட்டத்தில் வேறுபாடுகளை களையும் உடன்படிக்கை ஒன்றை எட்டும் முயற்சி மேற்கொள்ளப்படும் என்றார்.

Advertisement

 

முதல் கட்டம் பணயக்கைதிகளை விடுவிப்பது உட்பட 42 நாட்களைக் கொண்ட மனிதாபிமான கட்டமாக இருக்கக் கூடும் என்று சிக்லி குறிப்பிட்டுள்ளார்.

தொடரும் தாக்குதல்

Advertisement

இஸ்ரேல் மீது கடந்த 2023 ஒக்டோபர் 7 ஆம் திகதி பலஸ்தீன போராளிகள் நடத்திய தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டு 251 பேர் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்தே காசாவில் போர் வெடித்தது.

அது தொடக்கம் காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் இடைவிடாத தாக்குதல்களில் 45,300க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். காசாவில் 2.3 மில்லியன் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட அனைவரும் போல் தமது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு ஒட்டுமொத்த காசாவும் வெறும் இடிபாடுகளாக மாற்றப்பட்டுள்ளது.

எனினும் காசாவில் இஸ்ரேல் தனது உக்கிர தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகிறது. காசா நகரின் கிழக்கே வீடு ஒன்றின் மீதும் டெயிர் அல் பாலாஹ்வில் வாகனம் ஒன்றின் மீதும் இஸ்ரேல் கடந்த திங்கட்கிழமை இரவு நடத்திய வான் தாக்குதல்களில் எட்டுப் பேர் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

Advertisement

இதில் வாகனத்தில் சென்ற நால்வரும் வீட்டில் இருந்த இரு பெண்கள் மற்றும் ஒரு சிறுவர் உட்பட நால்வரும் கொல்லப்பட்டிருப்பதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டுள்ளது.

 

மத்திய காசா நகரில் அல் சரயா சந்திக்கு அருகில் ஒன்று கூடி இருந்த பொதுமக்களை இலக்கு வைத்து இஸ்ரேல் நடத்திய செல் தாக்குதல் ஒன்றில் நான்கு பேர் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Advertisement

காசாவில் பகுதி அளவு இயங்கும் வைத்தியசாலைகளில் ஒன்றான வடக்கு காசாவில் இருக்கும் கமால் அத்வான் வைத்தியசாலைக்கு அருகே இஸ்ரேல் ஆளில்லா விமானங்கள் தீமூட்டும் பொருட்களை வீசியதாக அந்த வைத்தியசாலை நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. இதனால் அருகில் உள்ள பல வீடுகளும் தீப்பற்றியுள்ளன.

இந்த வைத்தியசாலையில் உள்ளவர்களை வெளியேறவும் வைத்தயசாலையை மூடவும் இஸ்ரேல் இராணுவம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. ‘நாம் தினசரி அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருகிறோம்’ என்று கமால் அத்வான் வைத்தியசாலையின் பணிப்பாளர் ஹுசம் அபூ சபியா குறிப்பிட்டுள்ளார். ‘குண்டுகள் அனைத்து பக்கங்களிலும் தொடர்ந்து விழுந்து வருகின்றன. இதனால் கட்டங்கள், மருத்துவ பிரிவுகள் மற்றும் பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு காசாவில் இருந்து மக்களை நிரந்தமாக வெளியேற்றி அங்கு யுத்த சூன்ய வலயம் ஒன்றை உருவாக்க இஸ்ரேல் முயல்வதாக பலஸ்தீனர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன