இந்தியா
மாணவி பாதிக்கப்பட்ட சம்பவத்தை அரசியல் படுத்த வேண்டாம்: உயர்கல்வி அமைச்சர் கோவி செழியன்

மாணவி பாதிக்கப்பட்ட சம்பவத்தை அரசியல் படுத்த வேண்டாம்: உயர்கல்வி அமைச்சர் கோவி செழியன்
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவத்தை அரசியல் படுத்த வேண்டாம் என்று உயர் கல்வி அமைச்சர் கோவி செழியன் கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் கடந்த டிசம்பர் 23ஆம் தேதி இரவு கல்லூரி வளாகத்தில் இரண்டு மர்ம நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக நாம் மின்னம்பலத்தில் விரிவாக செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்நிலையில் அண்ணா பல்கலை விவகாரம் தொடர்பாக உயர்கல்வி அமைச்சர் கோவி செழியன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் “கிண்டி பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இது போன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்க பல்கலைக் கழக அளவில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து உரிய முடிவுகள் எடுக்கப்படும். தனிப்பட்ட ஒரு மாணவி பாதிக்கப்பட்டுள்ள இச்சம்பவத்தை அரசியல் ஆக்க விரும்புகிறவர்கள் கடந்த ஆட்சியில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் அன்றைய ஆட்சியாளர்களின் அழுத்தத்தால் காவல்துறையில் புகார் அளிக்கக் கூட பாதிக்கப்பட்டவர்கள் பயந்தனர் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்
திமுக ஆட்சியில் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெகு விரைவில் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் போராடி வந்த நிலையில், காவல்துறையினர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு அவர்கள் போராட்டத்தை வாபஸ் வாங்கினர்.