இலங்கை
நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த மருத்துவமனைக்கு திடீர் விஜயம்!

நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த மருத்துவமனைக்கு திடீர் விஜயம்!
கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த மருத்துவமனை விஜயத்தின்போது நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவமனையின் பல்வேறு தேவைகள் குறைபாடுகள் குறித்து கேட்டறிந்து கொண்டார்.
இங்கு மருத்துவமனையின் ஒரு பிரிவுக்கான இயந்திரங்கள் பழுதடைந்தமை தொடர்பில் எழுந்த விமர்சனங்களுக்கு விடையளிக்கும் முகமாக துரித கதியில் அவற்றை திருத்தியமைக்க உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியிருந்தார்.
மருத்துவமனையின் சுற்றுச்சூழலையும் அதிகாரிகள் மற்றும் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த மருத்துவமனையின் மருத்துவ அத்தியட்சகர் ஏ.எல்.எம்.ரகுமானுடன் சென்று பார்வையிட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினருக்கு மருத்துவ அத்தியட்சகர் மருத்துவமனையில் செயற்படுத்தப்பட வேண்டிய அபிவிருத்தி திட்ட வரைபுகளுடனான முன்மொழிவை தெளிவுபடுத்தினார்.
மேலும் இதன் போது குறித்த மருத்துவமனையின் புதிய கட்டட நிர்மாணங்களை பார்வையிட்ட அவர் மருத்துவமனையின் அபிவிருத்திக்கு பல மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்து நிர்மாணப்பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக அவ்விடத்தில் உறுதியளித்தார்.
பின்னர் அங்கு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருகை தந்த பொதுகமக்களிடம் சிநேக பூர்வமாக உரையாடி குறைநிறைகளை கேட்டறிந்து கொண்டார்.
இத்திடீர் விஜயத்தினை அடுத்து மருத்துவமனை அபிவிருத்தி மற்றும் குறைநிறைகள் தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடலிலும் அவர் கலந்துகொண்டார். (ப)