இந்தியா
நேரு குறித்து அவதூறு: நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட காமெடியன்

நேரு குறித்து அவதூறு: நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட காமெடியன்
முன்னாள் பிரதமர் நேரு குறித்து அருவருக்கத்தக்க வகையில் அவதூறாக பேசியதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், பரத் பாலாஜி நிபந்தனை அற்ற மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில் நகைச்சுவை என்ற பெயரில் இந்தியாவின் முதல் பிரதமரான மறைந்த ஜவஹர்லால் நேரு குறித்தும், இந்திய சுதந்திரம் குறித்தும் மிகவும் அருவருக்கத்தக்க அவதூறான கருத்துகளை STANDUP COMEDY செய்துவரும் பரத் பாலாஜி என்ற இளைஞர் பேசியிருந்தார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது பேச்சுக்கும் பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
’
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தனது கடும் கண்டனத்தை தெரிவித்து பரத் பாலாஜியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘STANDUP COMEDY என்ற பெயரில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு குறித்து அவதூறாக, அவரின் நன்மதிப்பை சீர்குலைக்கும் வகையில் பரத் பாலாஜி என்பவர் பேசிய பேச்சை வன்மையாகவும், கடுமையாகவும் கண்டிக்கின்றேன்.
புகழ்பெற்ற தலைவர்களை பற்றி அவதூறாக பேசி விளம்பரம் தேடுவது வாடிக்கையாகி விட்டது. கண்ணியக்குறைவான இவரின் பேச்சு காங்கிரஸ் பேரியக்கத்தில் உள்ள அனைத்து உறுப்பினருக்கும் மிகுந்த மன உளைச்சலை உண்டாக்கியுள்ளது.
வரலாறு குறித்து எள்ளளவும் அறியாத இவர் மீது தமிழ்நாடு காவல்துறை கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும். தமிழக முதல்வர் இவ்விஷயத்தில் தலையிட்டு, உரிய முறையில் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்” என்று செல்வப்பெருந்தகை தெரிவித்திருந்தார்.
இதுபோன்று பலத்தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்த நிலையில், நிபந்தனையற்ற மன்னிப்புக்கேட்டு பரத் பாலாஜி வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில், “எனது சமீபத்திய வீடியோ ஒன்று தற்செயலாக மக்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளது. இப்போது வீடியோவை நான் நீக்கிவிட்டேன். இது கவனக்குறைவாக நடந்தது. பண்டித ஜவஹர்லால் நேரு மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. நான் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கிறேன். இது மீண்டும் நடக்காது.’ என்று தெரிவித்துள்ளார்.