Connect with us

இந்தியா

தமிழ்நாட்டில் 13 புதிய நகராட்சிகள், 25 பேரூராட்சிகள் உருவாகிறது!

Published

on

Loading

தமிழ்நாட்டில் 13 புதிய நகராட்சிகள், 25 பேரூராட்சிகள் உருவாகிறது!

தமிழ்நாட்டில் 13 புதிய நகராட்சிகள், 25 பேரூராட்சிகள் உருவாக்கப்படுவதாக ஐந்து அரசாணைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன் ஐபிஎஸ் இன்று (ஜனவரி 1) வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு நகரமயமாதலில் இந்தியாவில் முன்னோடி மாநிலமாக உள்ளது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நகர்ப்புர மக்கள் தொகை 48.45 சதவீதமாகவும் தற்போது நகர்ப்புரங்களில் வாழும் மக்கள் தொகை சதவீதம் மேலும் உயர்ந்துள்ளது.

Advertisement

எனவே, மாநிலத்தின் மிக வேகமான நகரமயமாக்கலை கருத்திற்கொண்டு, நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளை மறுசீரமைக்க வேண்டியதன் அவசியம் எழுகின்றது. மாநகராட்சிகள், நகராட்சிகள் போன்ற பெரியளவிலான நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளைச் சுற்றி அமைந்துள்ள ஊராட்சிகள் / பேரூராட்சிகள் போன்றவை நகரங்களின் / பெருநகரங்களின் நுழைவாயிலாக அமைந்துள்ளதுடன், உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருவாய் ஈட்டித் தருகின்ற பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட பெருநிறுவனங்கள், தொழிற்சாலைகள் பலவும் இவற்றில் அமைந்துள்ளன.

இப்பெருநிறுவனங்கள், தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்கள் ஏராளமானோர் அருகிலுள்ள நகர்ப்புர பகுதிகளிலும், அதனைச் சுற்றியுள்ள ஊராட்சிகளிலும் குடியிருந்து வருகின்றனர்.

மேற்கண்ட பகுதிகளில் மக்களுக்கு தேவையான அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் செய்வதற்கும், திட்டமிட்ட வளர்ச்சிக்கும் நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளின் மறுசீரமைப்பு அவசியமாகிறது. இதன் மூலம் தொடர்புடைய பகுதிகளில் குடியிருக்கும் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

Advertisement

மேலும், மாநகராட்சி/ நகராட்சி/ பேரூராட்சிகளின் எல்லைகளை சுற்றி அமைந்துள்ள பெரும்பாலான ஊரகப்பகுதிகள் நகர்ப்புர பகுதிகளுக்கு சமமாக வளர்ந்து வருகின்றன. எனவே நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளை சுற்றி அமைந்துள்ள பகுதிகளுக்கும், நகர்ப்புரங்களுக்கு இணையான வகையில் சாலைகள், குடிநீர், திடக்கழிவு மேலாண்மை, திரவக்கழிவு மேலாண்மை, பொது/சமுதாய பயன்பாட்டிற்கான நவீன கழிப்பிடங்கள், பாதாளச் சாக்கடை கட்டமைப்பு, ஆற்றல்மிகு தெருவிளக்குகள் போன்ற மக்களுக்கான இன்றியமையாத அடிப்படை வசதிகளை விரிவுப்படுத்த வேண்டியது அவசியமாகிறது.

இவற்றோடு வேகமாக நகரமயமாகிவரும்/வளச்சியடைந்துவரும் பெரும்பாலான சிறிய உள்ளாட்சி அமைப்புகளால் மக்களுக்கு தேவையான அடிப்படை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கான நிதி மற்றும் இடப்பற்றாக்குறை மற்றும் உட்கட்டமைப்பு வசதி திட்டங்களை நிறைவேற்றுதல் உள்ளிட்ட மக்களுக்கான அடிப்படை வசதிப் பணிகள்/ சேவைகளுக்கான விரைவான, திறம்பட்ட செயலாக்கத்திற்கான பொறியாளர்கள் உள்ளிட்ட தேவையான பணியமைப்பு குறைந்த அளவிலேயே உள்ளது போன்றவற்றை களையவும் உள்ளாட்சி அமைப்புகளின் மறுசீரமைப்பு அவசியமாகிறது.

இதன்மூலம், நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைக்கப்படும் பகுதிகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் குடியிருக்கும் பொதுமக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதுடன், அடிப்படை வசதிகள். கட்டமைப்பு மேம்பாடு, மேம்படுத்தப்பட்ட சுகாதாரம் மற்றும் மருத்துவ வசதிகளும் மக்களுக்கு கிடைக்க ஏதுவாகும்.

Advertisement

இம்மேம்பாட்டினால், பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் புதிய தொழிலகங்கள் ஏற்படவும், வேலைவாய்ப்பு உருவாகவும், வருவாய் பெருகவும், அனைத்து தரப்பு வளர்ச்சிக்கும் ஏதுவாகும்.

அரசு நகரமயமாக்கலின் சவால்களை எதிர்கொள்ளும் வகையில், நகர்ப்புரத்தினை ஒட்டியுள்ள உள்ளாட்சி அமைப்புகளின் நகரமயமாக்கலின் தன்மையினை பொறுத்து, கிராம ஊராட்சிகளை மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுடன் இணைத்தும், பேரூராட்சிகளை நகராட்சிகளாகவும். நகராட்சிகளை மாநகராட்சிகளாகவும் தரம் உயர்த்துதல்/மறுசீரமைப்பு மேற்கொண்டு வருகிறது.

நடவடிக்கைகளை தொடர்ந்து இதன்படி, கடந்த 2021 ஆம் ஆண்டு 6 புதிய மாநகராட்சிகள் மற்றும் 28 நகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

Advertisement

அதே போன்று, 10.08.2024 அன்று திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி மற்றும் புதுக்கோட்டை ஆகிய 4 மாநகராட்சிகள் அருகிலுள்ள 2 பேரூராட்சிகள் மற்றும் 46 ஊராட்சிகளை இணைத்து, அனைத்து சட்ட நடைமுறைகளை பின்பற்றி மாநகராட்சிகளாக அமைத்துருவாக்கியுள்ளது.

மேலும்.12.08.2024 அன்று மாமல்லபுரம், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் திருவையாறு ஆகிய பேரூராட்சிகளை நகராட்சியாக அமைத்துருவாக்க உத்தேச முடிவினை அறிவித்து அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்நிலையில், அரசு, நகரமயமாதலின் வீச்சு, நிர்வாகத் தேவைகள், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை திறம்படவும், முழுஅளவிலும் வழங்குதல் (comprehensive manner), உள்ளாட்சிப் பகுதிகளின் எதிர்கால வளர்ச்சிக்கான தேவைகள் ஆகியவற்றை கருத்திற்கொண்டு, தகுதியான மேலும் பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளின் மறுசீரமைப்பை மேற்கொள்வதென முடிவு செய்துள்ளது.

Advertisement

தற்போது. 28 மாவட்டங்களில் உள்ள கிராம ஊராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக்காலம் வரும் 05.01.2025ஆம் தேதியன்று நிறைவடைகிறது.

இந்த மாவட்டங்களில் உள்ள நகர்ப்புரத்தன்மை வாய்ந்த ஊராட்சிகளை அருகிலுள் மாநகராட்சிகள், நகராட்சிகளுடன் இணைக்கவும், பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகளை இணைத்து நகராட்சியாக அமைத்துருவாக்கம் செய்திடவும் உள்ளாட்சி அமைப்புகளின் மறுசீரமைப்பு தொடர்பான உயர்நிலைக்குழு, மாவட்ட ஆட்சியர்களுடன் மேற்கொண்ட தொடர் ஆலோசனைகளின் அடிப்படையில், உரிய செயற்குறிப்புகள் பெறப்பட்டுள்ளன.

அரசு இச்செயற்குறிப்புகளை பரிசீலித்து, பெருநகர சென்னை மாநகராட்சி, மதுரை, திருச்சிராப்பள்ளி உள்ளிட்ட 16 மாநகராட்சிகளுடன், 4 நகராட்சிகள். 5 பேரூராட்சிகள் மற்றும் 149 ஊராட்சிகளை இணைக்கவும்,

Advertisement

திருவாரூர், திருவள்ளுர், சிதம்பரம் உள்ளிட்ட 41 நகராட்சிகளுடன் 147 ஊராட்சிகள் மற்றும் 1 பேரூராட்சியை இணைக்கவும்,

பேரூராட்சிகளுடன் ஊராட்சிகளை இணைத்தும், தனித்தும் கன்னியாகுமரி, அரூர், பெருந்துறை உள்ளிட்ட புதிதாக 13 நகராட்சிகளை அமைத்துருவாக்கவும்,

கிராம ஊராட்சிகளை இணைத்து மற்றும் தனியாகவும் ஏற்காடு, காளையார்கோவில், திருமயம் உள்ளிட்ட புதிதாக 25 பேரூராட்சிகளை அமைத்துருவாக்கவும்,

Advertisement

29 கிராம ஊராட்சிகளை 25 பேரூராட்சிகளுடன் இணைக்கவும் உத்தேச முடிவினை மேற்கொண்டுள்ளது.

இது தொடர்பாக தக்க சட்டவகைமுறைகளின் கீழ் ஆணைகள் வெளியிடப்பட்டு, உரிய நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்நடவடிக்கையின் மூலம் பொதுமக்களுக்கு தேவையான தரமான அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை அளித்திடும் நோக்கத்தை சிறப்பான முறையில் எய்திடும் வகையில், தொடர்ச்சியாக அமைந்துள்ள பகுதிகளை (contiguous areas) ஒருங்கிணைத்து, நிதி ஆதாரங்கள் உள்ளிட்ட வளர்ச்சிக்கான அனைத்து ஆதாரங்களும் சரியான அளவில் பயன்படுத்தப்படும் வகையில் உட்கட்டமைப்பு வசதி மேம்பாட்டிற்கான ஒட்டுமொத்த திட்டமிடுதலை மேற்கொள்ளவும், இடஞ்சார்ந்த திட்டமிடல் (spatial planning) உள்ளிட்ட பல்வேறு காரணிகளை ஒருங்கிணைத்தல் / திறம்பட செயலாக்குதல் மூலம் திட்டமிடப்பட்ட நகர்ப்புர வளர்ச்சியை நெறிமுறைப்படுத்தவும் ஏதுவாகும்.

நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளின் மறுசீரமைப்பின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டுள்ள தமிழ்நாடு அரசு, முதலமைச்சரின் ஆணையின் பேரில் ஐந்து அரசாணைகளை வெளியிட்டுள்ளது.

Advertisement

இவ்வரசாணைகள் தமிழ்நாடு அரசின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அரசு, நகரமயமாக்கலின் சவால்களை திறம்பட எதிர்கொள்ளும் வகையில், சீரான நகர்ப்புர வளர்ச்சி. செம்மையான நிருவாகம் ஆகியவற்றை உறுதிசெய்ய தேவையான இது போன்ற நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளும்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன