இலங்கை
அரகலய போராட்ட காலத்தில் அரசாங்கத்தை ஒருபோதும் காட்டிக்கொடுக்கவில்லை; சவேந்திரசில்வா தெரிவிப்பு

அரகலய போராட்ட காலத்தில் அரசாங்கத்தை ஒருபோதும் காட்டிக்கொடுக்கவில்லை; சவேந்திரசில்வா தெரிவிப்பு
அதிகார வெறி கொண்டவர்கள் கூறுவது போன்று நான் அரசைக் காட்டிக்கொடுக்க முற்படவில்லை. ஒரு அந்நிய நாட்டுக்கு சிப்பாயாக அல்லது வெளிநாட்டுத் தூதரகத்தில் கைப்பொம்மையாக இருக்க வேண்டும் என்ற தாழ்வு மனப்பான்மை எனக்கு இல்லை.
-இவ்வாறு தெரிவித்துள்ளார் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா.
முன்னாள் இராணுவத்தளபதியும், முன்னாள் பாதுகாப்புப் படைகளின் பிரதானியுமான ஜெனரல் சவேந்திரசில்வா நேற்று இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்றார். அவர் விடுத்துள்ள பிரியாவிடைச் செய்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் இதுதொடர்பாக மேலும் தெரிவித்துள்ளதாவது-
2022ஆம் ஆண்டு ‘அரகலய’ காலப்பகுதியில் இராணுவத் துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் உயிரிழப்பைத் தவிர்க்க விரும்பினேன். ஆனால் எனது உத்தியை ஆட்சியாளர்கள் தவறாகப் புரிந்து கொண்டனர். அது என்னை ஒரு பாதகமான நிலைக்குத் தள்ளியது. 2022ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி, நான் ஓய்வு பெறுவதற்கு ஏழு மாதங்களே எஞ்சியிருந்தன. ஆனால் அரசதரப்பினர் என்னை உத்தியோகபூர்வமாக இராணுவத் தளபதி பதவியில் இருந்து பாதுகாப்பு படைகளின் பிரதானியாக மாற்றினர்.
சில நாள்களின் பின்னர், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. அந்த நேரத்தில் நான் அரசாங்கத்தின் அனுமதியுடன் பாதுகாப்புப் படைகளின் பிரதானியாக வெளிநாட்டில் தேசிய பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொண்டிருந்தேன்.
2022ஆம் ஆண்டுப் போராட்டம் ஒரு உள்நாட்டுக் கலவரம். போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த குறைந்தபட்ச இராணுவ பலத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று நான் உத்தரவு பிறப்பித்தேன்.
நிராயுதபாணியான பொதுமக்களுக்கு எதிராக உத்தியோகபூர்வ அதிகாரத்தைப் பயன்படுத்தும் இரக்கமற்ற கொலைகாரனாக மாற எனக்கு விருப்பமில்லை. எனது நோக்கங்கள் மோசமானவை அல்லது தீயவை அல்ல, அதிகார வெறி கொண்ட ஆட்சியாளர்கள் கூறுவது போன்று நான் அரசைக் காட்டிக் கொடுக்க முற்படவில்லை. அப்படியென்றால் அப்போதைய பிரதமர் போராட்டகாரர்களிடம் சிக்கியபோது, அவரைப் பத்திரமாக மீட்க நான் ஏன் ’எயார் மொபைல்’ படைப்பிரிவை அனுப்ப வேண்டும்?.
2019 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் நாட்டை ஆட்சி செய்த முன்னாள் ஜனாதிபதிகள், எனது ஒழுக்கம் மற்றும் சட்டத்தை மதிக்கும் சேவையை அங்கீகரித்தே இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கான பிரதி ஆலோசகராக நியமித்தனர்-என்றார்.