இந்தியா
3 மணி நேரமாக காத்திருக்கும் ED அதிகாரிகள்… ஸ்டாலினை சந்திக்கும் துரைமுருகன்

3 மணி நேரமாக காத்திருக்கும் ED அதிகாரிகள்… ஸ்டாலினை சந்திக்கும் துரைமுருகன்
சோதனை நடத்த சென்ற இடத்தில் அமைச்சர் துரைமுருகன் வீடு பூட்டப்பட்டிருப்பதால் கடந்த 3 மணி நேரமாக அவரது வீட்டு முன்பு அமலாக்கத்துறை அதிகாரிகள் காத்து கிடக்கின்றனர்.
இகடந்த 2019 ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது, திமுக எம்.பி கதிர் ஆனந்துக்கு ஆதரவாக பணம் பட்டுவாடா செய்ததாக புகார் எழுந்தது. அதன்பேரில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் திமுக மாவட்ட நிர்வாகியான பூஞ்சோலை சீனிவாசனுக்கு சொந்தமான குடோனில் ரூ.11 கோடி கைப்பற்றப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக அவருக்கு சொந்தமான இடங்களில் இன்று அதிகாலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதே போன்று காட்பாடி காந்திநகரில் உள்ள நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்த சென்றனர். ஆனால் அந்த வீட்டில் வசிக்கும் திமுக எம்.பி. கதிர் ஆனந்த் வீடு பூட்டப்பட்டுள்ளது. இதனால் கடந்த 3 மணிநேரமாக சாவி கிடைக்காமல் அமலாக்கத்துறை அதிகாரிகள் வீட்டு வாசலில் காத்திருக்கின்றனர்.
இதற்கிடையே சென்னையில் உள்ள கோட்டூர்புரம் இல்லத்தில் அமைச்சர் துரைமுருகன் தனது வழக்கறிஞர்களுடன் ஆலோசனை செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை. தற்போது வீட்டில் யாரும் இல்லை. தெரிந்த பிறகு கருத்து சொல்கிறேன். சோதனை தொடர்பாக உங்களுக்கு எந்த அளவு தெரியுமோ, அதே அளவுதான் எனக்கும் தெரியும்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் துரைமுருகன் சந்திக்க சென்றுள்ளார்.