இந்தியா
தேசிய கீதம் அவமதிப்பு? : உரையை வாசிக்காமல் வெளியேறிய ஆளுநர்

தேசிய கீதம் அவமதிப்பு? : உரையை வாசிக்காமல் வெளியேறிய ஆளுநர்
சட்டமன்ற கூட்டத்தொடரின் தொடக்கத்தில் தேசிய கீதம் பாடப்படாததால் உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என். ரவி சட்டமன்றத்தை விட்டு வெளியேறியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் இன்று (ஜனவரி 6) காலை 9.30 மணிக்கு தொடங்கியது. இதற்காக தலைமை செயலகத்திற்கு வருகை தந்த ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் முதல்வர் ஸ்டாலின் ஆகியோருக்கு உரிய மரியாதை அளிக்கப்பட்டது.
தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு, ஆளுநரை சட்டமன்றத்திற்குள் அழைத்துச் சென்றார்.
கூட்டத்தின் முதல் நிகழ்ச்சியாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. தொடர்ந்து ஆளுநர் தேசிய கீதம் பாட அறிவுறுத்தியதாகவும் அதனை ஏற்க மறுத்ததால் ஆளுநர் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை வாசிக்காமல் உடனடியாக சட்டப்பேரவையை விட்டு வெளியேறினார்.
இதொடர்பாக ஆளுநர் மாளிகை எக்ஸ் தள பக்கத்தில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.
அதில், “தமிழக சட்டசபையில் இன்று மீண்டும் பாரத அரசியலமைப்பு மற்றும் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டது. தேசிய கீதத்தை மதித்தல் என்பது நமது அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள முதல் அடிப்படைக் கடமையாகும். இது ஜனாதிபதியின் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும் பாராளுமன்றத்தில் பாடப்படுகிறது அல்லது இசைக்கப்படுகிறது. இதேபோல் அனைத்து மாநில சட்டப்பேரவைகளிலும் ஆளுநர் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும் பாடப்படுகிறது.
இன்று ஆளுநர் சட்டப்பேரவைக்கு வரும்போது தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடப்பட்டது. ஆளுநர் மாளிகையின் அரசியலமைப்பு கடமையை மரியாதையுடன் நினைவூட்டியதுடன், தேசிய கீதத்தைப் பாடுவதற்காக அவைத் தலைவர் மற்றும் சபாநாயகர், முதலமைச்சருக்கு உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார். ஆனால், அவர்கள் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். அரசியல் சாசனம் மற்றும் தேசிய கீதத்துக்கு இவ்வளவு அவமரியாதை செய்ததில் ஒரு தரப்பினராக இருக்கக் கூடாது என்று கடும் வேதனையுடன் அவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர்” என்று விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.
எனினும் இந்த பதிவானது வெளியான சில நிமிடங்களில் ஆளுநர் மாளிகையில் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் இருந்து அகற்றப்பட்டது குறிப்பிடத்தது.
ஆளுநர் வெளியேறிய நிலையிலும், சட்டமன்ற விதிப்படி ஆளுநர் உரையை சபாநாயகர் அப்பாவு தற்போது தமிழில் வாசித்து வருகிறார்.