இந்தியா
பொங்கல் விடுமுறை: வசூல் வேட்டைக்கு தயாராகும் ஆம்னி பேருந்துகள்… தடுக்க 30 குழுக்கள்!

பொங்கல் விடுமுறை: வசூல் வேட்டைக்கு தயாராகும் ஆம்னி பேருந்துகள்… தடுக்க 30 குழுக்கள்!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் தொடர் விடுமுறை அறிவித்துள்ள நிலையில், ஆம்னி பேருந்துகளைக் கண்காணிக்க 30 குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதாக போக்குவரத்து ஆணையரகம் தெரிவித்துள்ளது.
தொடர் விடுமுறை என்பது பயணிகளை விட ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு அதிக மகிழ்ச்சியை அளித்து வருகிறது.
காரணம் ஒரே நேரத்தில் சொந்த ஊருக்கு லட்சக்கணக்கான மக்கள் ரயில் மற்றும் அரசு பேருந்துகளுக்கு அடுத்து போக்குவரத்திற்கு ஆம்னி பேருந்துகளை தான் அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.
இதனை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளில் பல மடங்கு அதிக கட்டணம் வசூலிப்பதாக தற்போது வரை புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் இந்தாண்டு பொங்கல் விடுமுறையை பயன்படுத்தி, அதிக கட்டண வசூல் உள்ளிட்ட விதிமுறை மீறல்களில் ஈடுபடும் ஆம்னி பேருந்துகளைக் கண்காணிக்க 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து ஆணையரகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக போக்குவரத்து ஆணையரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில், ஆம்னி பஸ்கள் அதிகமாக இயக்கப்படும். பொங்கல் பண்டிகை நெருங்க உள்ளதால், ஆம்னி பஸ்கள் இயக்கம் அதிகமாக இருக்கும்.
எனவே, ஆம்னி பஸ்களில் வரி நிலுவை, அதிக சுமை, அதிக கட்டணம், பர்மிட் இல்லாமல் இயக்குவது போன்ற விதிமீறல்களும் காணப்படும். இதுகுறித்து சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்க, தமிழகம் முழுவதும், 30 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு குழுவிலும் மூன்று பேர் இருப்பர். இக்குழுவினர் நெடுஞ்சாலை மற்றும் முக்கிய பஸ் நிலையங்களில் திடீர் சோதனை நடத்துவர். ஆம்னி பஸ்களில் விதிமீறல்கள் இருந்தால், அபராதம் விதிப்பது, ‘பர்மிட் சஸ்பெண்ட்’ போன்ற நடவடிக்கைகளை எடுப்பர்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.