Connect with us

இந்தியா

இது முதல் முறையல்ல… அதிகார மோதலால் பாதுகாப்பின்றி பரிதவிக்கும் அண்ணா பல்கலை!

Published

on

Loading

இது முதல் முறையல்ல… அதிகார மோதலால் பாதுகாப்பின்றி பரிதவிக்கும் அண்ணா பல்கலை!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் குற்றவாளி யாராக இருந்தாலும் எவ்வித பாரபட்சமும் இன்றி உச்சபட்ச தண்டனை வாங்கித் தர அரசு தீவிரமாக இருக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் சட்டமன்றத்தில் பேசியிருக்கிறார்.

குற்றம் நடந்த பிறகு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், அண்ணா பல்கலை பாதுகாப்பு குறித்தும் முதல்வர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

இதேநேரம் அண்ணா பல்கலைக் கழகத்துக்குள் பதிவாளருக்கும், பாதுகாப்புத் துறை அதிகாரிக்கும் இடையில் நீண்ட காலமாக நிலவி வரும் மோதல் போக்கும், இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் நடக்க முக்கியக் காரணம் என்கிறார்கள் பல்கலை வட்டாரத்தில்.

அண்ணா பல்கலை மாணவி கடந்த டிசம்பர் 23-ஆம் தேதி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இந்த வழக்கில் கோட்டூர்புரம் போலீசார் திமுக ஆதரவாளரான ஞானசேகரனை கைது செய்தனர்.

மாணவிக்கு நேர்ந்த கொடுமைக்கு நீதி கேட்டு அரசியல் கட்சிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

இந்த வழக்கு குறித்து தமிழ்நாடு சாராத வெளிமாநிலத்தைச் சேர்ந்த தமிழ்நாட்டில் பணிபுரியும் 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு விசாரணை செய்து வருகிறது.

கைது செய்யப்பட்ட ஞானசேகரன், பாதிக்கப்பட்ட மாணவி பல்கலையில் உள்ள பேராசிரியர்கள், பதிவாளர், செக்யூரிட்டி ஆபீசர்கள் மற்றும் மாணவ – மாணவிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில்தான்… அண்ணா பல்கலைக் கழகத்தில் மாணவி விவகாரம் சம்பந்தமாக, செக்யூரிட்டி ஆபீசருக்கும் பதிவாளருக்கும் இடையே மோதல் போக்கு பற்றி பல்கலைக்கழக பேராசிரியர்கள் சிலரே நம்மிடம் மனம் திறந்தனர்.

Advertisement

“அண்ணா பல்கலையில் சுமார் 16,000 மாணவர்கள் படிக்கிறார்கள். இதில் என்.ஆர்.ஐ கோட்டா 5%, வெளிநாட்டினருக்கு 5%, இண்டஸ்டரியல் கோட்டா 5% என ஒதுக்கீடு கொடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 85 சதவிகித மாணவர்கள் மெரிட் அடிப்படையில் சேர்க்கப்படுவார்கள்.

கடந்த பல ஆண்டுகளாகவே நிர்வாக சீர்கேட்டால் பல விதமான குளறுபடிகளும், குற்றங்களும் நடந்து வருகிறது.

இந்த பல்கலைக் கழகத்தில் இதுபோன்ற சம்பவம் புதிதல்ல. 2013 முதல் நடந்து வருகிறது. 2015-ல் வெளி ஆள் ஒருவர் உள்ளே புகுந்து மாணவ- மாணவிகளிடம் பிரச்சினை செய்ததால், அப்போதே கல்லூரிக்குள் பெரும் போராட்டம் நடந்தது. போலீசாரும் தலையிட்டனர்.

Advertisement

பல்கலை நிர்வாகத்தினர் மாணவர்களை அழைத்துப் பேசி சமரசம் செய்தனர்.
அதைத்தொடர்ந்து அவ்வப்போது சம்பவம் நடப்பதும், அதை மறைத்து வருவதுமாக இருக்கிறது.

2021-ல் திமுக ஆட்சிக்கு வந்ததும், துணை வேந்தராக வேல்ராஜ் நியமிக்கப்பட்டார். வேல்ராஜ், அவருக்கு வேண்டியப்பட்ட பிரகாஷ் என்பவரை 2023-ல் பதிவாளராக நியமித்தார்.

2024 ஆகஸ்ட்டில் தனது துணை வேந்தர் பதவி காலம் முடிவதற்கு முன்பு பிரகாஷை நிரந்தர பதிவாளராக நியமிக்க தேர்வு வைத்தார்.

Advertisement

இதில் பேராசிரியர் பாண்டுரங்கன் முதலிடத்துக்கு வந்தார். பிரகாஷ் 5ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டார். ஆனாலும் அவரையே பதிவாளராக நியமித்தார் துணைவேந்தர் வேல்ராஜ். இந்த நியமனம் ஒப்புதலுக்காக சிண்டிகேட்டுக்கு அனுப்பப்பட்டது.

அப்போது சிண்டிகேட் உறுப்பினர்கள், 5 ஆவது இடத்தில் உள்ளவரை எப்படி பதிவாளராக நியமிக்க முடியும் என்று நிராகரித்தனர். இந்த சிண்டிகேட் உறுப்பினர்களில் ஒருவராக தற்போது எழும்பூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ பரந்தாமன் உள்ளார். இவர் வழக்கறிஞர் வில்சன் மூலமாக பதிவாளர் நியமனம் செல்லாது என்று வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில், 2024 ஆகஸ்டில் வேல்ராஜுக்கு துணை வேந்தர் பதவிக்காலம் முடிந்தும் அதே பல்கலையில் பேராசிரியராக தொடர்ந்து வருகிறார். இவர் துணை வேந்தராக இருந்த காலத்தில் தான், இவரும் பிரகாஷும் சேர்ந்து 162 பணிகளுக்கு போஸ்டிங் போட்டனர்.

Advertisement

அதில் 85% நாகர்கோயில், கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். அப்போதே பிரகாஷ் மீதும், வேல்ராஜ் மீதும் ஊழல் புகார்களும் ஆளுநர் மாளிகைக்கு சென்றது. இந்த நிலையில் டிசம்பர் 23ஆம் தேதி மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்ததையடுத்து, செக்யூரிட்டி ஆபீசர் துக்காராமை சஸ்பெண்ட் செய்து ஆர்டர் போட்டார் பதிவாளர் பிரகாஷ்.

அதற்கு செக்யூரிட்டி ஆபீசர் நேரடியாகவும், மெயில் மூலமாகவும் பதிவாளர் பிரகாஷுக்கு, ‘என்னை சஸ்பெண்ட் செய்தது தவறு. நான் 21 நாள் விடுப்பில் செல்கிறேன். எனவே சஸ்பெண்ட் ஆர்டரை வாபஸ் வாங்க வேண்டும். இல்லை என்றால் அனைவரும் விசாரணைக்கும் உள்ளாக்கப்படுவோம்’ என்று பதில் புகார் அனுப்பியுள்ளார்” என்கிறார்கள்.

இதுகுறித்து தற்போது பணியில் உள்ள செக்யூரிட்டிகளிடம் விசாரித்தோம்.

Advertisement

“இங்குள்ள அனைத்து செக்யூரிட்டிகளும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள். எனவே அனைவரும் டியூட்டியில் சரியாக இருப்போம். புகார்களையும், குறைகளையும் அவ்வப்போது தெரிவித்துவிடுவோம்.

அப்படிதான் செக்யூரிட்டி ஆபீசர் துக்காராம் பலமுறை, “அண்ணா பல்கலைக் கழகத்தில் செக்யூரிட்டிகள் போதவில்லை, கூடுதலாக செக்யூரிட்டிகளை நியமிக்கவேண்டும், குறிப்பிட்ட இடங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும், யுனிவர்சிட்டிக்குள் வருவதற்கு, கேட்டுகளை(gate) தாண்டி சில தனிப்பட்ட வழிகள் இருக்கிறது. அவற்றை அடைக்க வேண்டும், விடுதி மாணவ மாணவிகள் நேரத்திற்கு மீறி வெளியில் சுற்றுகிறார்கள். அதை ஒழுங்குபடுத்த வேண்டும்” என்று பலமுறை பதிவாளருக்கு எழுத்துபூர்வமாகவும் நேரடியாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், அதை பதிவாளர் கண்டுகொள்ளவில்லை. இப்போது செக்யூரிட்டி ஆபீசரை சஸ்பெண்ட் செய்வது எந்த விதத்தில் நியாயம்? ” என்று கேட்டார்கள்.

பதிவாளர் பிரகாஷிடம் பேச, அவரது அலுவலகத்தில் உள்ள லேண்ட் லைன் எண்ணுக்கு தொடர்புகொண்டோம்.

Advertisement

அவரது அலுவலக ஊழியர் ஒருவர் போனை எடுத்தார். அவரிடம், நம்மை அறிமுகம் செய்துகொண்டு, பதிவாளரிடம் சில விளக்கங்களை கேட்க வேண்டும் என்று கூறியதும், சில விநாடிகளுக்கு பிறகு… இது சம்பந்தமாக பிஆர்ஓ பா.வேந்தனை தொடர்புகொள்ளுங்கள் என்று அவரது தொலைபேசி எண்ணை கொடுத்தார்.

அவருக்கு தொடர்புகொண்டு, செக்யூரிட்டி ஆபீசர் துக்காராம் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறித்தும், பாலியல் வன்கொடுமை நடந்ததற்கு பல்கலையில் நிர்வாக குறைபாடுதான் காரணம் என்றும் சொல்கிறார்களே எனவும் கேட்டோம்.
அதற்கு அவர், “இதைப் பற்றி நான் சொல்லமுடியாது. பதிவாளரிடம் பேசுங்கள்” என, பிரகாஷின் கைபேசி எண்ணை கொடுத்தார்.

பிரகாஷின் கைபேசிக்கு பலமுறை நாம் தொடர்புகொண்டும் அவர் போனை எடுக்காததால், குற்றச்சாட்டுகளை குறிப்பிட்டு வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பினோம். அதற்கும் பதில் இல்லை.

Advertisement

மீண்டும் பிஆர்ஒ வேந்தனை தொடர்புகொண்டு விஷயத்தைச் சொல்ல, பேராசிரியர் குமரேசனை தொடர்கொள்ள சொன்னார்.

அவரது எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசியபோது, “நான் இந்த பல்கலைக் கழகத்தில் இயக்குநராகவும், பேராசிரியராகவும் அகாடமியின் இன்சார்ஜாகவும், லீகல் செக்சன் இன்சார்ஜாகவும் இருக்கிறேன்” என்றார்.

அவரிடம் மாணவ – மாணவிகளின் பாதுகாப்பு குறித்தும், விடுதியின் நேரக் கட்டுப்பாடு குறித்தும் கேட்டோம்.

Advertisement

“இவர்கள் எல்.கே.ஜி மாணவர்கள் அல்ல. உலகப் புகழ் பெற்ற பல்கலையின் மாணவர்கள். அவர்களை ஓரளவுக்கு மேல் கட்டுப்படுத்த முடியாது” என கூறினார்.

அவரிடம் செக்யூரிட்டி ஆபீசர் துக்காராம் ஏற்கனவே பல முறை கேட்டும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்ற புகார் குறித்து கேட்டோம்.

“இதற்கு நான் பதில் சொல்ல முடியாது. பாலியல் வன்கொடுமை சம்பவம் நடப்பதற்கு முன்பு 49 செக்யூரிட்டி இருந்தார்கள். அதன் பிறகு 15 செக்யூரிட்டிகள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது 64 செக்யூரிட்டிகள் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்” என லைனை துண்டித்தார்.

Advertisement

இதுபோன்று நிர்வாக குறைபாடுகளால்தான் முழுக்க முழுக்க மாணவி வன்கொடுமைக்கு ஆளானது காரணம். இந்த குறைபாடுகளை அப்போதே சரி செய்திருந்தால் இந்த கொடுமை நடந்திருக்காது என்கிறார்கள் கல்லூரி பேராசிரியர்கள் வட்டாரத்தில்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன