இந்தியா
டாப் 10 செய்திகள் : ஒரே நாடு ஒரே தேர்தல் ஜேபிசி கூட்டம் முதல் புதிய இஸ்ரோ தலைவர் வரை!

டாப் 10 செய்திகள் : ஒரே நாடு ஒரே தேர்தல் ஜேபிசி கூட்டம் முதல் புதிய இஸ்ரோ தலைவர் வரை!
மக்களவை, மாநிலங்களவை, யூனியன் பிரதேசங்களுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் வகையில் கொண்டுவரப்பட்ட மசோதாவை பரிசீலிக்க அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவின்(ஜேபிசி ) முதல் கூட்டம் இன்று (ஜனவரி 8) நடைபெறுகிறது.
2025 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஜனவரி 6ம் தேதி தொடங்கிய நிலையில் இன்று மூன்றாவது நாளாக கூடுகிறது. அப்போது ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டு அதன் மீது விவாதம் நடைபெறவுள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் (இஸ்ரோ) தற்போது தலைவராக உள்ள சோம்நாத் பதவிக்காலம் விரைவில் முடிவடையவுள்ளது. இந்த நிலையில், இஸ்ரோவின் புதிய. தலைவராக வி. நாராயணனை மத்திய நியமன குழு நியமித்துள்ளது. இவர் கன்னியாகுமரி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆந்திராவுக்கும் நாளை ஒடிசாவுக்கும் செல்ல உள்ளார். அப்போது, 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக இன்று கடலோர தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.90க்கும், டீசல் ரூ.92.48க்கும் விற்பனையாகி வருகிறது.
கே ஜி எஃப் புகழ் யாஷ் நடிக்கும் டாக்சிக் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை அவரது பிறந்தநாளை முன்னிட்டு இன்று ஜனவரி 8 ஆம் தேதி காலை 10.25 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது.
ஆளுநர் ரவியை கண்டித்து நேற்று தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் போராட்டம் நடத்திய நிலையில், திமுக போராட்டத்துக்கு மட்டும் போலீஸ் எப்படி அனுமதி கொடுத்தது என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. இந்த நிலையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக திமுகவினர் 3,000 பேர் மீது சைதாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப் 4 தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் இன்று முதல் தொடங்குகிறது.
பல்கலைக்கழக துணை வேந்தர்களை நியமிக்க ஆளுநருக்கு அதிகாரம் அளிக்கும், பல்கலைக்கழக மானியக்குழுவின் (யுஜிசி) திருத்தப்பட்ட வரைவு வழிகாட்டு நெறிமுறைகளுக்கு முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். சட்டப்போராட்டம் நடைபெறும் என்றும் மத்திய அரசை எச்சரித்துள்ளார்.