இந்தியா
திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி: மோடி, ஸ்டாலின் இரங்கல்

திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி: மோடி, ஸ்டாலின் இரங்கல்
திருப்பதியில் இலவச டோக்கன் வாங்குவதற்காக ஏராளமானோர் குவிந்ததால் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்ததற்கு பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு நாளை (ஜன.10) நடைபெற உள்ளது. ஜனவரி 10 ஆம் தேதி முதல் ஜனவரி 19 ஆம் தேதி வரை சொர்க்க வாசல் திறந்திருக்கும். சொர்க்க வாசல் திறப்புக்கு பிறகு பக்தர்கள் சொர்க்க வாசல் வழியாக திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.இந்நிலையில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்தை முன்னிட்டு தேவஸ்தானம் சார்பில் இன்று அதிகாலை 5.30 மணி முதல் இலவச டோக்கன்கள் வழங்கப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் நேற்று அறிவித்து இருந்தது.அதற்காக இலவச தரிசன டோக்கன்களை வாங்க ஏராளமான பக்தர்கள் குவிந்ததால் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது.அதிகாலையில் இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் பலர் மூச்சு திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சேலத்தை சேர்ந்த மல்லிகா என்ற பெண்னும் பொள்ளாச்சியை சேர்ந்த பெண் ஒருவரும் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர்.இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலியான இச்சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஆந்திராவின் திருப்பதி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்தால் மிகுந்த மனவேதனையடைந்ததாகவும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் ஆந்திர அரசு மேற்கொண்டு வருவதாகவும் பிரதமர் மோடி பதிவில் தெரிவித்துள்ளார். அதேபோல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் இரங்கல் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலியான சம்பவத்தை அறிந்து மிகவும் துயரம் அடைந்தேன்.தமிழ்நாட்டைச் சேர்ந்த நபரும் உயிரிழந்தது கவலை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளை தொடர்பு கொண்டு விசாரித்ததாகவும் மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும், உயர்தர சிகிச்சைகளையும் வழங்க அதிகாரிகளுக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“