இந்தியா
அமைச்சர் மா.சு. மீதான வழக்கில் இன்று தீர்ப்பு: ஹெச்.ராஜாவுக்கு தண்டனை வழங்கிய நீதிபதி

அமைச்சர் மா.சு. மீதான வழக்கில் இன்று தீர்ப்பு: ஹெச்.ராஜாவுக்கு தண்டனை வழங்கிய நீதிபதி
அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீதான வழக்கில் 22 வருட விசாரணைக்கு பிறகு இன்று (ஜனவரி 10) தீர்ப்பு வழங்க இருக்கிறது சென்னை நீதிமன்றம்.
கடந்த 2002 ஆம் ஆண்டு சென்னையின் துணை மேயராக கராத்தே தியாகராஜன் இருந்தார். அப்போது திமுகவின் மாமன்ற தலைவராக இருந்தார் மா சுப்பிரமணியன்.
ஜெயலலிதாவின், ‘ஒருவருக்கு ஒரு பதவி’ சட்டத்தால் அப்போது மேயர், சட்டமன்ற உறுப்பினர் என இரண்டு பதவிகளை வைத்திருந்த மு. க. ஸ்டாலின் மேயர் பதவியை ராஜினாமா செய்து சட்டமன்ற உறுப்பினர் பதவியில் தொடர்ந்தார். இதன் பின் துணை மேயரான கராத்தே தியாகராஜன் பொறுப்பு மேயராகவும் செயல்பட்டு வந்தார். இப்படி அரசியல் காட்சிகள் மாறியதையடுத்து ஸ்டாலின் இல்லாத மாமன்றத்தில் திமுகவின் முகமாக மாறினார் மா.சுப்பிரமணியன்.
இந்த நிலையில் 2002ல் துணை மேயர் கராத்தே தியாகராஜன் தலைமையில் மாமன்ற கூட்டம் கூடியது. அப்போது திமுக சார்பில் கண்ணப்பர் திடல் மீன் அங்காடி தொடர்பான டெண்டர் விஷயமாக பிரச்சனை எழுப்பப்பட்டது.
இது தொடர்பான விவாதத்தின் போது திமுக கவுன்சிலர்களுக்கும் அதிமுக கவுன்சிலர்களுக்கும் இடையில் வாய்த் தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது.
இதில் திமுக கவுன்சிலர்கள் மைக், நாற்காலி உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு அதிமுக உறுப்பினர்களை தாக்கியதில்… அப்போதைய அதிமுக கவுன்சிலர்களான ஜீவரத்தினம், பரிமளா, மங்கையர்க்கரசி, குமாரி உள்ளிட்ட பலருக்கு தலை, கை ,கால் போன்ற பகுதிகளில் காயம் ஏற்பட்டது.
இந்தத் தகராறு தொடர்பாக சென்னை மாநகராட்சி கட்டிடம் ரிப்பன் மாளிகை அமைந்துள்ள பகுதியை உள்ளடக்கிய சென்னை பெரியமேடு காவல் நிலையத்தில் அதிமுக சார்பில் சுகுமார் பாபுவும், சென்னை மாமன்ற செயலாளர் ரீட்டாவும் புகார் அளித்தார்கள்.
இந்த புகாரின் அடிப்படையில் அப்போதைய மா. சுப்பிரமணியன், மற்றும் திமுக கவுன்சிலர்கள் வி.எஸ். பாபு, சிவாஜி, தமிழ்வேந்தன், நெடுமாறன், சௌந்தர்யா, மூர்த்தி ஆகிய ஏழு பேருக்கு எதிராக இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
கலகம் செய்யும் நோக்கில் சட்டவிரோதமாக கூடுதல், ஆயுதம் கொண்டு தாக்குதல், பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பல ஆண்டுகளாக நிலுவையிலே இருந்த இந்த வழக்கில் கடந்த 2019 ஆம் ஆண்டு தான் காவல்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. காவல்துறை தரப்பில் 70-க்கும் மேற்பட்ட சாட்சிகளை விசாரித்து இந்த குற்ற பத்திரிகை தயாரித்தது.
எம்பி எம்எல்ஏக்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து முடிந்த நிலையில் நீதிபதி ஜெயவேல் இன்று ஜனவரி 10ஆம் தேதி தீர்ப்பு வழங்குகிறார்.
சமீபத்தில் பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா மீது பெரியார் சிலை உடைப்பு தொடர்பான கருத்து மற்றும் திமுக எம்பி கனிமொழி மீதான விமர்சனம் ஆகிய விவகாரங்களில் இரண்டு வழக்குகள் சென்னையில் உள்ள எம்பி எம்எல்ஏக்கள் மீதான வழக்குகள் விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இந்த வழக்குகளை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெயவேல், கடந்த டிசம்பர் இரண்டாம் தேதி, “இந்த இரு வழக்குகளிலும் காவல்துறை தரப்பில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு பதிவுகளும் ஹெச். ராஜாவின் சமூகத்தில் வலைப் பக்கத்திலிருந்து அனுப்பப்பட்டது என்பதை இந்த நீதிமன்றம் உறுதி செய்து ராஜா குற்றவாளி என தீர்மானிக்கிறது. அவருக்கு இந்த இரண்டு வழக்குகளிலும், தலா ஆறு மாதம் சிறை தண்டனை மற்றும் 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. மேல் முறையீடு செய்ய ஏதுவாக இந்த தண்டனை நிறுத்தி வைக்கப்படுகிறது” என்று தீர்ப்பளித்திருந்தார் நீதிபதி ஜெயவேல்.
இந்த நீதிபதி ஜெயவேல்தான், தற்போதைய அமைச்சர். மா. சுப்பிரமணியன் உள்ளிட்டோர் மீதான வழக்கிலும் இன்று தீர்ப்பு வழங்க இருக்கிறார்.
சட்ட மற்றும் அரசியல் வட்டாரங்களில் இவ்வழக்கின் தீர்ப்பு பேசு பொருளாக ஆகியுள்ளது.
–