இந்தியா
ஸ்டாலின் -எடப்பாடி… மாறி மாறி சவால்! சபாநாயகர் வைத்த ஃபைனல் டச்!

ஸ்டாலின் -எடப்பாடி… மாறி மாறி சவால்! சபாநாயகர் வைத்த ஃபைனல் டச்!
பொள்ளாச்சி விவகாரத்தில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாயும் இன்று (ஜனவரி 10) மாறி மாறி சட்டமன்றத்தில் சவால் விட்டிருக்கிறார்கள்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் இன்று அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பினார்.
அப்போது பொள்ளாச்சி பாலியல் வழக்கை குறிப்பிட்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், “பொள்ளாச்சி பாலியல் வழக்கில் புகார் அளித்து 12 நாட்கள் பிறகு தான் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. ஆனால் அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் புகார் அளித்த அடுத்த நாளே எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது.
நான் சொல்வது தவறு என ஆதாரத்தை காட்டினால் நீங்கள் சொல்லும் தண்டனையை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் நீங்கள் நிரூபிக்கவில்லை என்றால் நான் சொல்லும் தண்டனையை ஏற்றுக் கொள்வீர்களா” என்று எடப்பாடி பழனிசாமிக்கு சவால் விடுத்தார்.
இதற்கு எடப்பாடி பழனிசாமி, ” முதல்வர் ஸ்டாலின் சட்டமன்றத்தில் நேற்று பொள்ளாச்சி சம்பவம் குறித்து திரைக்கதை, வசனத்தை இயற்றி பேசியுள்ளார். இவை அனைத்தும் உண்மைக்கு மாறானவை.
கடந்த அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சியில் என்ன நடந்தது என்று கொஞ்சம் நினைத்து பார்க்க வேண்டும். பாதிக்கப்பட்ட பல பெண்களில் ஒருவர், தனக்கு நேர்ந்த கொடுமையைப் பற்றி தன்னுடைய அண்ணனிடம் சொல்கிறார்.
பிரச்சினைக்குரிய நான்கு பேரையும் அவரே பிடித்துக் கொண்டு வந்து பொள்ளாச்சி டவுன் காவல் நிலையத்தில ஒப்படைக்கின்றார். போலிசார் வழக்கு பதியவில்லை. எல்லாரையும் விடுவித்துவிட்டார்கள். இதுதான் அன்றைய முதல்வர் ‘சார்’ ஆட்சியில் சட்டம்-ஒழுங்கின் இலட்சனம்’ என்று பேசியுள்ளார்.
இது தவறு. பாதிக்கப்பட்ட பெண் தானே நேரில் சென்று 24.2.2019 அன்று பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார். (வழக்கு எண். 59/2019). காவல்துறை அப்புகாரின் பேரில் 24 மணிநேரத்தில், அதாவது 25.2.2019 அன்றே, முக்கிய குற்றவாளிகளில் மூன்று பேர், சபரிநாதன், சதீஷ் மற்றும் வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் மற்றொரு முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு,5.3.2019 அன்று கைது செய்யப்படுகிறார் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்ததன் அடிப்படையில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் அனைவரும் இன்று வரை சிறையில் உள்ளனர். இதுதான் உண்மை
அது மட்டுமா ? பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரை அப்படியே குற்றம் செய்தவர்களிடமே கொடுத்து விட்டார்கள் என்று ஸ்டாலின் பேசியதும் தவறு.
பாதிக்கப்பட்ட பெண் காவல்நிலையத்தில் கொடுத்த புகார் யாரிடமும் கொடுக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தவுடன் குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்படுகின்றனர். இதுதான் உண்மை’ என்றார்.
அதிமுக பிரமுகர் ‘பார் நாகராஜன்’ என்பவர் பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனைத் தாக்குகிறார். அந்த புகார் மீதும் நடவடிக்கை எடுக்காத அரசுதான் அதிமுக அரசு என்று ஸ்டாலின் சொல்கிறார்.
இது தவறு. பெண்ணின் அண்ணன் 26.2.2019 அன்று, செந்தில், பாபு, மணி (எ) மணிவண்ணன் மற்றும் வசந்தகுமார் ஆகியோர் தன்னை தாக்கியதாகவும், கொன்று விடுவதாகவும்தான் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இவ்வழக்கு எண் 60/2019, நாள் 26.2.2019 பெண்ணின் அண்ணன் கொடுத்த புகாரின் மீது காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து பார் நாகராஜன் உள்ளிட்ட அனைவரையும் 24 மணிநேரத்தில் கைது செய்தது. இதுதான் உண்மை.
முதல்வர் அரசியல் மேடைகளில் பேசும்போது திமுக போராட்டம் நடத்தியப் பிறகுதான் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று தவறாக பேசிவருகிறார். உண்மையில் 24.2.204 புகார் அளித்த அன்றே எப்.ஐ.ஆர் பதிவு செய்து, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி பொள்ளாச்சியில் போராட்டம் நடத்தியது 12.3.2019 மாலை தான். அதாவது குற்றவாளிகள் அனைவரும் கைதுசெய்யப்பட்டு சுமார் 18 நாட்கள் கழித்து, நாடாளுமன்ற பொதுத்தேர்தலின் போதுதான் திமுக அரசியல் ஆதாயத்திற்காக பொள்ளாச்சி விவகாரத்தை கையில் எடுத்தது.
இதுதான் உண்மை. மேலும் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று அப்போது எந்த எதிர்கட்சியும் கோரிக்கை வைக்கவில்லை.
யாரும் நீதிமன்றத்தை அணுகவில்லை. இந்த வழக்கு எவ்வித சந்தேகத்திற்கும் இடமளிக்காமல், வெளிப்படைத்தன்மையோடு உண்மை குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் என்ற தூய நோக்கத்தில் அதிமுக அரசு இவ்வழக்கை 12.3.2019 அன்றே சி.பி.ஐ-க்கு மாற்ற உத்தரவிட்டது. அதனடிப்படையில் அரசாணை 13.3.2019 அன்று வெளியிடப்பட்டது.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 24 மணி நேரத்தில் மூன்று குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். நான் சொன்னது தவறாக இருந்தால் நானும் உங்கள் சவாலை ஏற்றுக் கொள்கிறேன்” என்று பதில் அளித்துள்ளார்.
பொள்ளாச்சி விவகாரம் தொடர்பான ஆதாரங்களை சபாநாயகரிடம் வழங்க இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்த நிலையில்,
”இருவரும் சவால் விட்டிருக்கிறீர்கள். இத்தோடு முடித்துக் கொள்ளுங்கள். நாளை காலை இருவரும் ஆதாரங்களை என்னிடம் வழங்குங்கள்” என்று சபாநாயகர் அப்பாவு தலையிட விவாதம் முடிவுக்கு வந்தது.
விஷாலுக்கு கழுத்து நரம்பு பிரச்னையா?- வெளி வந்த அதிர்ச்சி தகவல்கள்!
’நாங்கள் இரட்டை வேடம்னா, நீங்கள் நான்கு வேடம்’- சட்டமன்றத்தில் ஸ்டாலின் vs எடப்பாடி