இந்தியா
விஜயகாந்த் ரசிகர் மன்ற தலைவர் டூ திமுக வேட்பாளர் : யார் இந்த வி.சி.சந்திரகுமார்?

விஜயகாந்த் ரசிகர் மன்ற தலைவர் டூ திமுக வேட்பாளர் : யார் இந்த வி.சி.சந்திரகுமார்?
ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவையைடுத்து வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறும் என இந்தியா தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது.
அதுமுதலே திமுக கூட்டணி வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்தது. அத்தொகுதியில் இரண்டு முறை வென்ற காங்கிரஸ் மீண்டும் போடியிடுமா? அல்லது திமுகவைச் சேர்ந்தவர் வேட்பாளராக களமிறக்கப்படுவரா என்ற குழப்பம் நிலவியது.
காங்கிரஸ் தரப்பில் ஈவிகேஎஸ் மகன் சஞ்சய் சம்பத் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
திமுக தரப்பில் முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர்களான ஈரோடு மாவட்ட துணை செயலாளரான செந்தில் குமார், அவரது அண்ணன் மகனும், ஈரோடு தெற்கு மாவட்ட அமைப்பாளருமான திருவாசகம், இதே தொகுதியில் தேமுதிக எம்எல்ஏ வாக இருந்து திமுகவில் தற்போது இணை கொள்கைப் பரப்பு செயலாளராக இருக்கும் வி.சி.சந்திரகுமார் மற்றும் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த குறிஞ்சி சிவக்குமார் ஆகியோர் தங்களை வேட்பாளராக அறிவிக்க முயற்சிகளை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் தான் காங்கிரஸ் போட்டியில் இருந்து விலக, தற்போது ஈரோடு கிழக்கு தொகுதி திமுக வேட்பாளராக முதல்வர் ஸ்டாலினால் இன்று (ஜனவரி 11) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார் வி.சி. சந்திரகுமார்.
ஈரோட்டைச் சேர்ந்தவரான வி.சி.சந்திரகுமார், விஜயகாந்த் ரசிகர் மன்ற தலைவராக இருந்து, பின்னர் தேமுதிக சார்பில் 2006 சட்டமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார் சந்திரகுமார்.
எனினும் 2011 ஆம் ஆண்டு தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு 10,644 வாக்குகள் வித்தியாத்தில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனார்.
விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த் என தேமுதிக தலைமையின் மிக நம்பிக்கைக்குரிய ஒருவராக இருந்தார். எம்.எல்.ஏ மட்டுமின்றி கட்சி கொறடாவாகவும், கொள்கை பரப்பு செயலாளர் சந்திரகுமார் இருந்தார். சட்டசபையில் கூட விஜயகாந்த் இல்லாத நிலையில் சந்திரகுமார்தான் கட்சியை நடத்தி வந்தார்.
எனினும் 2016ஆம் ஆண்டு அதிமுகவை தோற்கடிக்க வேண்டும் என கூறி மக்கள் நல கூட்டணியுடன் கூட்டணி அமைத்தார் விஜயகாந்த். அதிமுகவை தோற்கடிக்க வேண்டும் என்றால் திமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்ற வி.சி.சந்திரகுமார் கோரிக்கை வைத்தார்.
எனினும் அவரது கோரிக்கை ஏற்கபடாத நிலையில், சந்திரகுமார், பார்த்தீபன் போன்றோர் பிரிந்து வந்து ‘மக்கள் தேமுதிக’ என்ற அமைப்பை ஆரம்பித்தனர்.
அவர்கள் திமுக கூட்டணியை ஆதரிக்க, சந்திரகுமார் உள்ளிட்ட மூவருக்கு 2016 சட்டமன்ற திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு தரப்பட்டது. ஆனால் மூவரும் தோல்வியை தழுவினர்.
அதனைத்தொடர்ந்து அதே ஆண்டு ஜுன் 16ஆம் தேதி சென்னை, கோபாலபுரத்தில் அப்போது திமுக தலைவராக இருந்த கலைஞரை நேரில் சந்தித்து பேசினர். தொடர்ந்து மக்கள் தேமுதிக அமைப்பை திமுகவுடன் இணைப்பதாக அறிவித்தனர்.
இதனையடுத்து திமுக கொள்கை இணை பரப்பு செயலாளராக செயல்பட்டு வரும் வி.சி. சந்திரகுமார் இன்று ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை முன்னிட்டு திமுக வேட்பாளராக அறிவித்துள்ளார் ஸ்டாலின்.
ஈரோட்டு கிழக்கு தொகுதியில் முதலியார் சமூக வாக்குகள் அதிகம் இருக்கும் நிலையில், அதனை குறி வைத்து சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக கடந்த 2021 சட்டமன்ற தேர்தலிலும், 2023 இடைத்தேர்தலிலும் திமுக வேட்பாளராக அறிவிக்க இவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு ஈரோடு கிழக்கில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டது. எனினும் இந்த முறை கடும் போட்டிக்கு மத்தியில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் வி.சி.சந்திரகுமார்.
நேரடி திமுக வேட்பாளரே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் களமிறக்கப்பட வேண்டும் என அக்கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில், வி.சி. சந்திரகுமார் தற்போது களமிறக்கப்பட்டதால் திமுகவினர் அதனை கொண்டாடி வருகின்றனர். இதனால் இடைத்தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை திமுக கூட்டணி அறுவடை செய்யும் என அக்கட்சியினர் மத்தியில் நம்பிக்கை எழுந்துள்ளது.