இந்தியா
பெரியாருக்கு எதிராக புலம்புவர்களை கண்டால்… வீடியோ வெளியிட்டு சத்யராஜ் கண்டனம்!

பெரியாருக்கு எதிராக புலம்புவர்களை கண்டால்… வீடியோ வெளியிட்டு சத்யராஜ் கண்டனம்!
ஏதோ அரசியல் செய்ய வேண்டும் என்று பெரியார் மீது அவதூறு பேசுபவர்களை பார்த்தால் கோபம் கூட வரவில்லை. பரிதாபமாக இருக்கிறது என சத்யராஜ் விமர்சித்துள்ளார்.
சமீப காலமாக பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறி வரும் கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன.
இதனையடுத்து திமுக, விசிக, காங்கிரஸ், திராவிட இயக்கங்கள் மற்றும் பெரியாரிய அமைப்புகள் சார்பில் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
சீமான் மீது தமிழகம் முழுவதும் 70க்கும் அதிகமான வழக்குகள் பதிவாகி இருக்கும் நிலையில், சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் சீமான மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் சீமானின் கருத்துக்கு நடிகர் சத்யராஜ் கண்டனம் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில், ”தந்தை பெரியாருடைய திராவிட கருத்தியலின் அடிநாதமான சமூகநீதி கோட்பாட்டை பொது மேடைகளில் விளக்கி சொல்லி, அதன் உண்மையான விளக்கத்தை கூறி, நாங்கள் வந்தால் இதையெல்லாம் மாற்றி காட்டுவோம் என்று பேசுவதில் ஒரு நியாயம் இருக்கிறது.
ஏதோ அரசியல் செய்ய வேண்டும் என்று புதிதாக பேசுபவர்களை பார்த்து கோபம் கூட வரவில்லை. பரிதாபமாக இருக்குது. 100 ஆண்டுகளுக்கு மேலாக பேசுகிறார்கள். ஒரே ஆள் பேச முடியாது என்பதால் புது முகங்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். அந்த முது முகங்களை பார்த்து பரிதாபம் தானே பட முடியும்?
சமூகநீதி கோட்பாட்டையும், திராவிட கருத்தியலையும் நாட்டின் பெரும்பாலான கட்சிகள் ஏற்றுக் கொண்டுவிட்டன. காங்கிரஸ், கம்யூனிட்ஸ்ட் போன்ற கட்சிகளும் ஏற்றுக் கொண்டுள்ளன. ராகுல் காந்தி நாடாளுமன்றத்திலேயே பெரியாரின் கருத்தியலை பேசி இருக்கிறார். கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் வைக்கம் வீரர் பெரியாருக்கு மிகப்பெரிய விழாவை மு.க.ஸ்டாலின் தலைமையில் நடத்தி இருக்கிறார்.
திராவிடம் என்ற பெயரை கட்சியின் பெயரிலேயே வைத்திருப்பவர்கள் நிச்சயம் பெரியாரை ஆதரிப்பார்கள். திக, திமுக, மதிமுக, தபெதிக, திராவிட விடுதலை கழகம், திஇதபே, அதிமுக, தேமுதிக என்று இத்தனை கட்சிகளின் பெயர்களிலேயே திராவிடம் உள்ளது.
இன்று பாமக நிறுவனர் ராமதாஸ் ஒரு கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தங்களின் கொள்கை வழிகாட்டி பெரியார் என்று கூறியிருக்கிறார். விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையும் சூப்பர். அந்த அற்புதமான அறிக்கையை பொதுக்கூட்ட மேடையில் படிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்.
மநீம கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தந்தை பெரியாரின் சமூகநீதி கொள்கையை ஏற்றுக்கொண்டு செயல்படுகிறார். அன்புத்தம்பி விஜய் தவெகவின் கொள்கை தலைவராக பெரியாரை பிரகடனபடுத்தி இருக்கிறார். திராவிடமும், தமிழ் தேசியமும் எனது இரு கண்கள் என தெரிவித்துள்ளார்.
இவ்வளவு பேர் பெரியாரை ஏற்ற பின் திராவிட கருத்தியலுக்கு எதிராக பேசுபவர்களை பார்த்தால், அவர்கள் மீது பரிதாபம் தான் வருகிறது. பெரியாரின் கருத்தியல் மீது விமர்சனம் வைக்காமல், தனிமனித விமர்சனம் மட்டுமே வைக்கப்படுகிறது. பெரியார் குறித்து புலம்பும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று சத்யராஜ் விமர்சித்துள்ளார்.