இந்தியா
பொங்கலுக்கும் எக்ஸாம் வைக்குறாங்க… சு.வெங்கடேசன் செய்த செயல்!

பொங்கலுக்கும் எக்ஸாம் வைக்குறாங்க… சு.வெங்கடேசன் செய்த செயல்!
பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜனவரி 13 முதல் 16 வரை தேர்வுகள் நடைபெறாது என்று கேந்திரிய வித்யாலயா இன்று (ஜனவரி 13) அறிவித்துள்ளது.
மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பொங்கல் விடுமுறை நாட்களான ஜனவரி 13,16,17,18 ஆகிய தேதிகளில் தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக கேந்திரிய வித்யாலயா மண்டல துணை இயக்குனர் மணிவண்ணனுக்கு மதுரை சிபிஎம் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஜனவரி 10-ஆம் தேதி எழுதிய கடிதத்தில்,
“சென்னை, மதுரை, திருச்சி பள்ளிகளில் பொங்கல் விடுமுறை நாட்களில் ஜனவரி 13, 16, 17, 18 தேதிகளில் 6 ஆம் முதல் 11 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பொங்கல் அறுவடைத் திருநாள் மட்டுமல்ல, தமிழ் மக்களின் பண்பாட்டுடன் இணைந்தது. தமிழ்நாடு அரசு ஜனவரி 14 முதல் 18 வரை விடுமுறை அறிவித்துள்ளது.
கேந்திரிய வித்யாலயா குழந்தைகள் மட்டும் பொங்கல் விடுமுறையின் மகிழ்ச்சியை அனுபவிக்க முடியாமல் போய் விடக் கூடாது. இது மாணவர்களை உளவியல் ரீதியாக பாதிக்க கூடும். ஆகவே தேர்வுத் தேதிகளை மாற்றி பொங்கல் விடுமுறைக்கு பின்னர் நடத்த வேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தார்.
இந்தநிலையில், பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜனவரி 13 முதல் 16 வரை தேர்வுகள் நடைபெறாது என்று கேந்திரிய வித்யாலயா இன்று அறிவித்திருக்கிறது. கேந்திரிய வித்யாலயாவின் இந்த அறிவுப்புக்கு சு.வெங்கடேசன் எம்.பி நன்றி தெரிவித்துள்ளார்.