இலங்கை
’அரசியல் கைதிகள் விடயத்தில் இனவாதம்’!

’அரசியல் கைதிகள் விடயத்தில் இனவாதம்’!
வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் உரிமைக்காக போராடி கைது செய்யப்பட்டவர்களை அரசியல் கைதிகளாக கணிக்க முடியாது என்று தேசிய மக்கள் சக்தியின் நீதி அமைச்சர் அறிவிப்பதற்கு ஒரே காரணம் இனவாதம் தான் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்ற கோஷம் மேலோங்கி நிற்கின்றது.
இதனை வலியுறுத்தி கையொப்ப போராட்டம் ஊடாகவும், வேறு வழிகளிலும் வலியுறுத்தப்பட்டுவரும் நிலையில், நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அரசியல் கைதிகள் என்று யாரும் இல்லை என்று கூறுகிறார். அவர் அதனை சொல்வதற்கு அரசியல் பின்னணிதான் காரணம். ஏனெனில் இதற்கு முதல் அவருடைய தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தேர்தல் காலத்தில் வடக்கு, கிழக்குக்கு வந்த பொது கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று பேசியிருந்தார்.
ஆனால், தற்பொழுது நீதியமைச்சர் அந்த விடயத்திலிருந்து பின்வாங்குகின்றார். ஆனால் அதுவொரு அரசியல் காரணமாகத்தான் இருக்கவேண்டும்.
வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் உரிமைக்காக போராடி கைது செய்யப்பட்டவர்களை அரசியல் கைதியாக கணிக்க முடியாது என்று தேசிய மக்கள் சக்தியின் நீதி அமைச்சர் அறிவிப்பதற்கு ஒரே காரணம் இனவாதம் தான். இது கண்டிக்கப்படவேண்டிய விடயம் என்றார்.