இலங்கை
நீர்மட்டம் அதிகரித்ததால் பொதுமக்கள் பெரும் சிரமம்!

நீர்மட்டம் அதிகரித்ததால் பொதுமக்கள் பெரும் சிரமம்!
கிரான் பிரதேச செயலகப் பிரிவில் புலிபாய்ந்த கல் பாதை நீர்மட்டம் உயர்ந்து இருப்பதால் அந்தப் பாதையூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன் மாவட்டத்தின் குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டதனாலும் பருவப் பெயர்ச்சி மழை காரணமாகவும் பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனால் மாவட்டத்தின் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் குடும்பிமலை, புலிபாய்ந கல் திகிலிவெட்டை, கோராவெளி, பெண்டுகள் சேனை, சாராவெளி,முறுத்தானை போன்ற கிராமங்கள் உட்பட பல்வேறு கிராமசேவாகர் பிரிவுகளில் வாழும் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கிரான் புலிபாந்த கல் வீதியில் குறிப்பிட்ட அளவு சுமார் 300 மீற்றர் தூரம் வரை மக்கள் வெள்ள நீரோட்டம் ஊடாக கால் நடையாக நடந்து சென்று தங்களது பொருட்களை சுமந்து அப்பாலுள்ள படகு சேவை இடம்பெறும் இடத்தை அடைந்து அங்கிருந்து தமது போக்குவரத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ் படகுசேவையினை கிரான் பிரதேச செயலகம் ஏற்பாடு செய்துள்ளது.
சந்திவெளி துறை ஊடான போக்குவரத்திற்கான படகு சேவை கோறளைப்பற்று பிரதேச சபை மேற்கொண்டு வருகிறது. இருந்தபோதிலும் ஏற்கனவே பாதை ஊடாக அச்சமின்றி தங்ளது பயணங்களை மேற்கொண்டிருந்தனர்.
தற்போது குறித்த பாதை பழுதடைந்துள்ளதால் படகில் தங்களது போக்குவரத்தினை மேற்கொள்வதில் அச்சநிலை உள்ளதாக பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இவ் மக்கள் திகிலிவெட்டை, குடும்பிமாலை போன்ற அயல் கிராமங்களுக்கு தங்களது போக்குவரத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.
புலிபாய்ந்த கல் பிரதான வீதிக்கான பாலத்தினை அபிவிருத்தி செய்து தந்தால் வெள்ள காலத்தில் தங்களது போக்குவரத்தினை மேற்கொள்ள இலகுவாக அமையும் என தெரிவிக்கின்றனர்.