இலங்கை
விசமிகளால் பொய்யான குற்றச்சாட்டு – நா.வர்ணகுலசிங்கம் குற்றச்சாட்டு!

விசமிகளால் பொய்யான குற்றச்சாட்டு – நா.வர்ணகுலசிங்கம் குற்றச்சாட்டு!
தன்மீது விசமிகளால் பொய்யான குற்றச்சாட்டுக்கள் பரப்பப்பட்டு வருவதாக வடமாகாண கடற்றொழிலாளர் பிரதிநிதி நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.
அவர் இன்று தனது இல்லத்தில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 17/01/2025 அன்று இந்திய தூதரகத்தால், வடமராட்சி வடக்கை சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 40 பயனாளிகளுக்கு மீன்பிடி வலைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாகவும், வடமராட்சி வடக்கு பிரதேசத்திற்கு உட்பட்ட சங்கங்களிடமிருந்தே விபரங்களை பெற்று வழங்கியதாகவும், இது தொடர்பில் மீனவ அமைப்பு பிரதிநிதி ஒருவர் தனது குடும்பத்தை சேர்ந்த 7 பேருக்கான வலைகளை பெற்றுக்கொண்டதாக பொய்யான குற்றச்சாட்டு ஒன்று வெளியாகியுள்ளது என அவர் தெரிவித்தார்.
எனது குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கே வலைகளை வழங்க சங்கம் சிபார்சு செய்திருந்தது. 6 மணிக்கு பின்னர் போக்குவரத்து வசதி இல்லாத மயிலிட்டியை சேர்ந்த 5 பேருக்கே முச்சக்கர வண்டியில் இந்திய தூதரக அதிகாரிகளால் வலைகள் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டது.
வெளியாகியுள்ள எனக்கு எதிரான குற்றச்சாட்டானது கடற்றொழிலே செய்யாத, மீனவர்கள் என்று சொல்லிக்கொண்டு பல அமைப்புக்களில் பொருளாளராக இருப்போரால் பரப்பப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். (ப)