இந்தியா
திருச்செந்தூர் கடலோரம் ஒதுங்கும் அமானுஷ்ய கல்வெட்டுகள், சிற்பங்கள்!

திருச்செந்தூர் கடலோரம் ஒதுங்கும் அமானுஷ்ய கல்வெட்டுகள், சிற்பங்கள்!
திருச்செந்தூர் கடற்கரையில் அமானுஷ்ய சிற்பங்கள் கரை ஒதுங்கும் நிலையில் தலை, கைகள் இல்லாத சிலைகளும் கரை ஒதுங்குகின்றன. இது அவ்வப்போது நடப்பதால் திருச்செந்தூரில் என்னதான் நடக்கிறது என்ற கேள்வி எழுகிறது.
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள்.
கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் கோயில் முன்பாகவுள்ள கடற்கரையில் குடும்பத்துடன் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக கடலின் சீற்றம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் கடற்கரையில் சுமார் 50 அடிக்கு கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் நீராட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. பக்தர்களை பாதுகாப்பாக நீராடும்படி கோவில் நிர்வாகத்தினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
கடலரிப்பு காரணமாகவும், கடல் சீற்றத்தின் காரணமாகவும் திருச்செந்தூர் கடலுக்குள் இருந்து ஏராளமான பழங்கால சிற்பங்களும், கல்வெட்டுகளும் வெளியே வந்த வண்ணம் உள்ளன. கடந்த ஒரு மாத காலத்தில் 20- இற்கும் மேற்பட்ட சிலைகளும், 4 கல்வெட்டுகளும் தற்போது வரை வெளியே வந்துள்ளன.
தற்போது ஒரு கற்சிற்பம் சேதமடைந்த நிலையில் கடற்கரை ஓரத்தில் காணப்படுகிறது. மூன்று அடி உயரம் கொண்ட அந்தச் சிலையில் தலை மற்றும் இரண்டு கைகளும் இல்லை. கழுத்தில் பெரிய மாலை அணிந்தபடி நாட்டியமாடுவதற்காக இரண்டு கால்களையும் விரித்து வைத்தது போல் அந்த சிற்பம் உள்ளது. இடுப்பில் வேஷ்டி கட்டியபடி இந்தச் சிலை உள்ளது. அருகே மற்றொரு சிலையும் காணப்படுகிறது. அந்தச் சிலையும் தலை மற்றும் வலது கை சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. அந்தச் சிலை தட்சிணாமூர்த்தி சிலைபோல் காணப்படுகிறது.
இந்த இரு சிலைகள் அருகே ஒரு நாகர்சிலையும் காணப்படுகிறது. தொடர்ந்து கடலரிப்பு ஏற்பட்டு வருவதன் காரணமாக கடல் அலையில் சிக்கி வெளிவரும் சிற்பங்களை கடலில் நீராடும் பக்தர்கள் கரையோரம் வைத்து விட்டுச் சென்றுள்ளனர்.
தொடர்ந்து திருச்செந்தூர் கடலுக்குள் இருந்து சிலைகள் கிடைத்து வருவது பக்தர்கள் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.