உலகம்
தென் கொரிய விமான விபத்து குறித்து வெளியான தகவல்!

தென் கொரிய விமான விபத்து குறித்து வெளியான தகவல்!
தென் கொரியாவில் விபத்துக்குள்ளான பயணிகள் விமானத்தில் பறவை மோதியதற்கான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த டிசம்பர் 29 ஆம் திகதி காலையில் பேங்கொக்கில் இருந்து தென் கொரியாவுக்கு பயணித்த ஜெஜு ஏயார் பயணிகள் விமானம் தென் கொரிய விமான நிலையத்தில் தரை இறங்கிய சமயம் விபத்துக்குள்ளானதில் 179 பேர் உயிரிழந்ததோடு இருவர் காயங்களோடு மீட்கப்பட்டனர்.
இவ்விமான விபத்து குறித்து விசாரணைகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட அதிகாரிகள் முதற்கட்ட அறிக்கையை நேற்று வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையிலேயே இவ்விமானத்தில் பறவைகள் மோதியதற்கான ஆதாரங்கள் கிடைக்கபெற்றுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, குறித்த விமானத்தின் இரண்டு இன்ஜின்களிலும் பறவைகளின் இறகுகளும் இரத்தக்கறைகளும் காணப்பட்டன. இவை பெரிய கூட்டமாகப் புலம்பெயரும் தாரா வகையின் மாதிரிகள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரம், இந்த விமானம் ஒடுபாதையில் வேகமாகச் சென்று ஒடுபாதையின் முடிவில் காணப்பட்ட கொங்கிறீட்டில் மோதியமை குறித்தும் ஆராயப்படும்.
குறித்த தினத்தில் ஜெஜு ஏயார் விமானத்தின் விமானிகள் விமான நிலையத்தைத் தொடர்பு கொண்ட மூன்று நிமிடங்களுக்குப் பிறகு, விமான கட்டுப்பாட்டு கோபுரம் பறவைகளின் செயற்பாடு குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. அந்த சில நிமிடங்களில் விமானம் ஒரு பறவையில் மோதியதாகவும், மேடே சிக்னலை விமானி தெரிவித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தோடு அவர் எதிர் திசையில் இருந்து தரையிறங்கவும் அனுமதி கோரியுள்ளார். அச்சமயம் விமானத்தின் தரையிறங்கும் கருவி பயன்படுத்தப்படாமல் அது தரையிறங்கியதோடு ஓடுபாதையில் பாய்ந்து சென்று கொங்கிறீட் கட்டமைப்பில் மோதிய பிறகு வெடித்தது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.