இந்தியா
மீனவர்கள் மீது சூடு: இலங்கைக் கடற்படைக்கு இந்தியா கடும் கண்டனம்!

மீனவர்கள் மீது சூடு: இலங்கைக் கடற்படைக்கு இந்தியா கடும் கண்டனம்!
உருப்பெறுகின்றது தூதரக மோதல்
பருத்தித்துறைக் கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
இந்திய மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை தாக்குதலையும் துப்பாக்கிச் சூட்டையும் மேற்கொண்டுள்ளது. எந்தச் சூழ்நிலையிலும் இத்தகைய தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது. மீனவர்களின் பிரச்சினைகளை அவர்களின் வாழ்வாதாரக் கவலைகளைக் கருத்தில் கொண்டு மனிதாபிமானத்துடன் கையாள வேண்டும். மேலும், மீன்பிடி நடவடிக்கைகள் தொடர்பாக தற்போதுள்ள இருதரப்பு ஒப்பந்தங்களை இறுக்கமாகக் கடைப்பிடிக்க வேண்டும் – என்றுள்ளது.
அத்துடன், மீனவர்கள் மீதான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர், இலங்கை வெளிவிவகார அமைச்சால் நேரில் அழைக்கப்பட்டு அவரிடம் இந்தியாவின் அதிருப்தியும், கண்டனமும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் அண்மைக்காலமாக உறவு விரிசல் ஏற்பட்டு வருவதாகக் கருதப்படும் நிலையில், இந்தச் சம்பவம் இரண்டு நாடுகளுக்கும் இடையில் மிகப்பெரும் பகையைத் தோற்றுவிக்கும் சாத்தியங்கள் உள்ளதாக பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.