உலகம்
சீனா, இந்தியாவுக்கு இடையில் விரைவில் நேரடி விமான சேவை!

சீனா, இந்தியாவுக்கு இடையில் விரைவில் நேரடி விமான சேவை!
நேரடி வர்த்தக விமான சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்கு சீனாவும் இந்தியாவும் இணக்கம் தெரிவித்துள்ளன.
உலகில் அதிக சனத்தொகையைக் கொண்ட இரண்டு நாடுகளும் மீண்டும் வர்த்தக விமான சேவையை ஐந்து வருடங்களுக்கு பின்னர் மீண்டும் ஆரம்பிக்க உள்ளன. இந்தியாவின் வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி பெய்ஜிங்கில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியை நேற்று முன்தினம் சந்தித்தத்தைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடந்த 2020 இல் கொவிட் 19 பெருந்தொற்று தாக்கம் தோற்றம் பெற்றதைத் தொடர்ந்து சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தக விமான சேவை கள் நிறுத்தப்பட்டன. என்றாலும் அதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் மற்றும் அரசியல் பதற்றங்கள் விமான சேவை நிறுத்தத்தை நீடிக்கச் செய்தமை தெரிந்ததே. இந்திய வெளியுறவு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில், ‘நேரடி விமான சேவைகளை மீண்டும் தொடங்குவதற்கு இரு தரப்பினரும் கொள்கையளவில் ஒருமித்த கருத்தை எட்டியுள்ளோம்.
இது தொடர்பில் அதிகாரிகள் விரைவில் விபரங்களை வெளியிடுவார்கள்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சீன வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில், மேற்கு திபெத்தில் உள்ள கைலாஷ் மலை மற்றும் மானசரோவர் ஏரியை இந்திய யாத்ரீகர்களுக்கு இந்த ஆண்டு மீண்டும் திறந்து விட ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு இடங்களும் இந்து, பௌத்த மற்றும் சமண சமய நம்பிக்கைகளில் புனிதமாகக் கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.