இந்தியா
மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு: இலங்கை அரசுக்கு எதிராக ஜன.8-ல் புதுச்சேரி காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு: இலங்கை அரசுக்கு எதிராக ஜன.8-ல் புதுச்சேரி காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் சுப்பிரமணியன், முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன் ஆகியோர் காரைக்காலில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள், “கடந்த 27ஆம் தேதி காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல் மேடு பகுதியைச் சேர்ந்த 13 மீனவர்களையும், அவர்களது விசைப்படகையும் சிறைபிடித்ததோடு இரண்டு மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தபட்டுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் கடுமையாக பாதிக்கப்பட்ட கிளிஞ்சல் மேடு கிராமத்தைச் சேர்ந்த செந்தமிழ் என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர் யாழ்ப்பாணம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில், அவருக்கு உரிய மேல் சிகிச்சை அளிக்க அவரை சென்னை கொண்டு வந்து உரிய சிகிச்சை அளிக்க மத்திய அரசு முன்வர வேண்டும், சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் அவர்களது மீன்பிடி படகுகளை விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் வரும் 8 ஆம் தேதி காரைக்கால் புதிய பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என்று அறிவித்தனர்.செய்தி: பாபு ராஜேந்திரன் – புதுச்சேரி.