இந்தியா
போராட்டத்தில் இறங்கிய டெல்லியில் தி.மு.க. மாணவரணி!

போராட்டத்தில் இறங்கிய டெல்லியில் தி.மு.க. மாணவரணி!
மத்திய பா.ஜ.க அரசின் பல்கலைக்கழக மானிய குழுவான யு.ஜி.சி.யின் புதிய வரைவு நெறிமுறைகள் மாநில உரிமைகளை பறிப்பதைக் கண்டித்து டெல்லியில் இன்று தி.மு.க மாணவர் ஒருங்கிணைக்கும் கண்டனப் போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தில் தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி, ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, ம.தி.மு.க முதன்மை செயலாளர் துரை வைகோ உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பங்கேற்றனர்.
மத்திய பா.ஜ.க அரசு அண்மையில் யு.ஜி.சி-ன் புதிய வரைவு நெறிமுறைகளை வெளியிட்டிருந்தது. அதில் மாநில அரசுகளின் பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநிலங்களிடம் இருந்து பறிக்கும் வகையிலான திருத்தங்கள் இடம் பெற்றிருந்தன.
மாநிலங்களின் கீழ் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு கல்வி துறையை சேராத ஒருவரை கூட துணைவேந்தராக நியமிக்கலாம் என்கிற அம்சமும் அதில் இடம்பெற்றிருந்தது.
இதற்கு எதிராக தமிழ்நாட்டில் ஆளும் தி.மு.க அரசு முதல் எதிர்ப்பு குரலை வெளிப்படுத்தியது. தமிழ்நாடு சட்டசபையில் யு.ஜி.சி வரைவு நெறிமுறைகளுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதேபோல இந்தியா கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களில் யுஜிசிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பி இருந்தார்.
இதனை ஏற்று கேரளா மாநில சட்டசபையிலும் யு.ஜி.சி.க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் டெல்லி ஜந்தர் மந்தரில் தி.மு.க மாணவர் அணி ஒருங்கிணைப்பில் கண்டனப் போராட்டம் நடத்தப்பட்டது.
இந்தப் போராட்டத்தில் கனிமொழி, வைகோ, துரை வைகோ. திருச்சி சிவா, ஆ.ராசா உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் பங்கேற்று கண்டன உரையாற்றினர். மேலும் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வா! துணைவேந்தர் நியமனம் மாநில உரிமை என்பது உள்ளிட்ட கோசங்களும் எழுப்பப்பட்டன. இந்தக் கூட்டத்தில் பேசிய ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, யு.ஜி.சி விதி திருத்தங்களுக்கு எதிராக பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தமிழ்நாட்டில் இருந்து இத்தனை ஆயிரம் பேர் திரண்டுள்ளனர்; மத்திய அரசின் யு.ஜி.சி விதிகள் திருத்தங்களை குப்பை தொட்டியில் தூக்கி வீச வேண்டும்; இந்த விதிகள் மாநில சுயாட்சிக்கு எதிரானது; இதனால் ஆளுநர் பதவியையே நீக்க வேண்டும் என்றார். மேலும் இந்தியா என்பது ஒரே நாடு அல்ல; பல்வேறு தேசிய இனங்களை உள்ளடக்கியது தான். தேசிய இனங்களை ஒடுக்க, மாநிலங்களின் உரிமைகளை ஒடுக்க மத்திய பா.ஜ.க அரசு முயன்றால் இந்தியா இந்த நூற்றாண்டிலேயே தனித் தனி நாடுகளாக சிதறுண்டு தான் போகும் என்பதை மோடி அரசுக்கு எச்சரிக்கையாகவே தெரிவிக்கிறேன்-என்றார்.