இந்தியா
சாலையில் நின்ற லாரி மீது பைக் மோதி விபத்து: 3 பேர் மரணம்; உறவினர்கள் சாலை மறியல்!

சாலையில் நின்ற லாரி மீது பைக் மோதி விபத்து: 3 பேர் மரணம்; உறவினர்கள் சாலை மறியல்!
புதுச்சேரியில் நேற்று இரவு சாலையோரம் நின்றிருந்த லாரி மீது பைக் மோதி விபத்துக்குள்ளானதில், 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், காவல்துறையினரை கண்டித்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டதுபுதுச்சேரி அடுத்த கடப்பேரிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் 3 பேர், ஒரே பைக்கில் நேற்று இரவு 10.35 மணியளவில் சேதராப்பட்டு பத்துக்கண்ணு ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். இவர்கள் துத்திப்பட்டு பகுதியில் சென்றபோது, அவர்களின் பைக் எதிர்பாராத விதமாக அங்கு சாலையோரம் நின்றிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பைக்கில் சென்ற 3 பேரும் இருந்து தூக்கி வீசப்பட்டு, பலத்த காயமடைந்த நிலையில்,ரத்த வெள்ளத்தில் கிடந்த அவர்கள் சம்பவ இடத்திலேயே மூவரும் பலியாகினர்.இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த வில்லியனூர் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் போக்குவரத்து எஸ்பி மோகன்குமார் ஆகியோர், விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தியதை தொடர்ந்து 3 பேர் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்கு பதிந்து, பலியானவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.இந்த விபத்து தொடர்பான காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கடப்பேரிகுப்பம் பகுதியை சேர்ந்த சரண் ராஜ் (24), குயிலாப்பாளையம் பகுதியை சேர்ந்த குணசேகரன் (24), செந்தில் (42) ஆகியோர் விபத்தில் இறந்தர்கள் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் பெயிண்டிங் வேலை செய்து வந்ததும், இதில் சரண்ராஜ் பைக்கை ஓட்டிச் சென்றதும் தெரியவந்தது.போலீசார் தொடர்ந்து இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில் அப்பகுதியில் தொடர்ந்து சாலையோரம் நிறுத்தப்படும் லாரிகளால் விபத்து ஏற்படுவதாகவும், இதனைக் கண்டு கொள்ளாத காவல்துறையை கண்டித்து உயிரிழந்தவர்களின் உறவினர்கள் சேதராப்பட்டு-பத்து கண்ணு சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.செய்தி: பாபு ராஜேந்திரன் – புதுச்சேரி.