இந்தியா
புதுச்சேரியில் 4 பொதுத் துறை நிறுவனங்களில் ரூ.388.5 கோடி நஷ்டம்; தணிக்கை அறிக்கை

புதுச்சேரியில் 4 பொதுத் துறை நிறுவனங்களில் ரூ.388.5 கோடி நஷ்டம்; தணிக்கை அறிக்கை
புதுவை மாநிலத்தில் 4 அரசு பொதுத் துறை நிறுவனங்களில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரையில் ரூ.388.5 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக இந்திய தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழகம், புதுவை முதன்மை கணக்காய்வு தலைவர் திருப்பதி வெங்கடசாமி, “கடந்த 2017-22 ஆம் ஆண்டு வரையில் பாசிக் நிறுவனம் நுண்ணுயிர் உரம், பூச்சிக்கொல்லி, குப்பை உர விஷயங்களை முழுமையாக செயல்படுத்தாத காரணத்தால் ரூ. 2.14 கோடி வருவாய் இழப்பும், பாசிக் நிறுவனம் அரசு துறைகளுக்கு காய்கறிகளை மொத்த விலைக்கு தொடா்ந்து விநியோகிக்காததால், ரூ.9.1 கோடி இழப்பும், வேளாண் விற்பனைக் கூடங்களை மூடுவதில் ஏற்பட்ட காலதாமத்தால் பாசிக் நிறுவனத்துக்கு ரூ. 22.89 கோடி இழப்பும் ஏற்பட்டுள்ளன. பாசிக் நிறுவனம் துத்திப்பேட்டிலுள்ள நிலத்தை புதிய ஒப்பந்தம் மூலம் குத்தகைக்கு விட நடவடிக்கை எடுக்காததால் 2017 ஆம் ஆண்டு முதல் 2022 ஆண்டு வரை மட்டும் ரூ. 1.77 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டது. பி.ஆர்.டி.சி.,யில் புதிய பேருந்துகள் அறிமுகம் செய்யாததால் 2017 ஆம் ஆண்டு கால அளவை இழந்த பேருந்துகள் 15.7 சதவீதமாக இருந்தது. அதுவே கடந்த 2021-22 ஆம் ஆண்டில் 64.2 சதவீதமாக உயா்ந்தது. அதன்படி, அரசு பொதுத் துறை நிறுவனங்களான பாசிக், பாப்ஸ்கோ, பி.ஆர்.டி.சி, பி.டி.டி.சி ஆகிய நான்கு பொதுத் துறை நிறுவனங்களில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 2022 ஆண்டு வரை ஐந்து ஆண்டுகளில் ரூ. 388.5 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது,” என்று கூறினார். பேட்டியின்போது, முதுநிலை துணை கணக்காய்வுத் தலைவர் சுகேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.