இந்தியா
மீனவர்களை விடுவிக்க கோரி ஸ்டாலின் கடிதம்!

மீனவர்களை விடுவிக்க கோரி ஸ்டாலின் கடிதம்!
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரி இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 3 படகுகளுடன் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 10 இந்திய மீனவர்கள் நேற்று முன்தினம் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும், இப்பிரச்சனைக்கு நிரந்தரமாக தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு நேற்று கடிதம் எழுதியுள்ளார்.
இலங்கை கடற்படையினரால் தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டிய முதல்வர், மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் வாழ்வாதாரம் நீண்ட காலம் பாதிக்கப்படுவதால், இத்தகைய கைது நடவடிக்கைகளைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டுமென அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.